சமூக,-பொருளாதாரம், தனி நபர் வருமானம் உள்ளிட்டவற்றை அடைப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி நிலையில் இருப்பதாகவும்,
குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் குறைவான வளர்ச்சி நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னரான ரகுராம் ராஜன் முன்னர் இந்திய அரசின் தலைமை பொருளாதர ஆலோசகராக இருந்தபோது அவர் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையில் இதுக்குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் விடுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு கோரிக்கையை அடுத்து, எந்த மாநிலத்துக்கு எவ்வளவு நிதியை, எந்த அடிப்படையில் ஒதுக்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ரகுராம் ராஜன் தலைமையில் ஆறு பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை மத்திய அரசு கடந்த மே மாதம் நியமித்தது.
இக் குழுவில் ஷைபால் குப்தா, பரத் ராமசுவாமி, நஜீப் ஜங், நிரிஜா ஜி. ஜயால், துஹின் பாண்டே ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர்.
இக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கை அண்மையில் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.
ரகுராம் ராஜன் அறிக்கை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநிலங்களின் வளர்ச்சிக்கான தேவை, செயல்பாடு அடிப்படையில் மத்திய நிதி ஒதுக்கப்படும் முறைகள் குறித்த பொதுவான யோசனையை ரகுராம் ராஜன் குழு தெரிவித்துள்ளது.
மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய மொத்த நிதியில் 0.3 சதவீதத்தை அடிப்படை நிதியாக ஒதுக்கலாம் என்றும், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தேவை, செயல்பாடு அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்கலாம் என்றும் இக் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், மத்திய புள்ளியியல் துறையின் கீழ் உள்ள தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (என்எஸ்எஸ்ஓ) மதிப்பிட்டுள்ள தனி நபர் வருவாய் அடிப்படையில் மாநிலத்தின் பின்தங்கிய நிலையையும், பன்னிரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் கணக்கிடப்பட்ட வறுமை விகிதம் உள்ளிட்ட பல்வேறு முறைகளின்படி மாநிலத்தின் பல்நோக்கு வளர்ச்சி குறியீட்டையும் நிர்ணயிக்கலாம் என்று இக்குழு கூறியுள்ளது.
அதன்படி, வளர்ச்சிக் குறியீட்டில் 0.6 மற்றும் அதற்கு அதிகமான குறியீடு மதிப்பைப் பெறும் மாநிலங்களை ‘மிகக் குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்கள்’ என கருதலாம் என்று இக்குழு தெரிவித்திருக்கிறது.
0.4 முதல் 0.6 வரை மதிப்பீடு பெறும் மாநிலங்களை ‘குறைவான வளர்ச்சி பெற்ற மாநிலங்கள்’ எனவும் 0.4-க்கு கீழாக மதிப்பீடு பெறும் மாநிலங்களை ‘ஓரளவுக்கு வளர்ந்த மாநிலங்கள்’ எனவும் கருதலாம் என்று ரகுராம் ராஜன் குழு பரிந்துரைத்துள்ளது.
மேற்கண்ட இரு பரிந்துரைகளின்படி சிறப்பு நிதி கோரும் மாநிலங்களுக்கான தகுதி எது என்பதைக் கண்டறிய முடியும்.
ரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இக் குழுவின் பரிந்துரையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
ரகுராம் ராஜன் குழு உருவாக்கியுள்ள அந்த அறிக்கையின் படி;
இந்தியாவின் மிகக்குறைவான வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Least Developed States): ஓரிசா (0.798), பீகார்(0.765), மத்தியபிரதேசம் (0.759), சத்தீஸ்கர்(0.752), ஜார்கண்ட் (0.746), அருணாச்சல பிரதேசம் (0.729), அசாம்(0.707), மேகாலயா(0.693), உத்தரப்பிரதேசம்(0.693), ராஜஸ்தான்(0.626).
குறைவான வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Less Developed States): மணிப்பூர் (0.571), மேற்கு வங்கம்(0.551), நாகாலாந்து(0.546), ஆந்திரப் பிரதேசம்(0.521). ஜம்மு காஷ்மீர்(0.504), மிஸோரம் (0.495), குஜராத்(0.491), சி்க்கிம் (0.430), இமாச்சல பிரதேசம் (0.404).
ஒப்பீட்டளவில் வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Relatively Developed States): ஹரியானா (0.395), உத்தராகண்ட் (0.383), மகாராஷ்ட்டிரா (0.352), பஞ்சாப் (0.341), தமிழ்நாடு (0.095), கேரளா (0.095), கோவா (0.045).
இந்த ஆய்வறிக்கையானது தேசிய தனிநபர் வருமானத்தில் ஒரு மாநிலத்தின் நடப்பு நிலையும் அதன் மனிதவள மேம்பாட்டு குறியீடுகளையும் கொண்டு இந்த அளவீடு செய்யப்பட்டிருக்கிறது.
இவற்றுடன் மாநிலத்தின் புவி ஆதார நிலைகள், மக்கள்தொகை அடர்த்தி ஆகிய காரணிகளின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கையாக வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக