உலகம் முழுவதும் கருத்து கணிப்புகளை நடத்தும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Ipsos என்ற நிறுவனம் கடந்த 18 மாதங்களாக பிரான்ஸ் குடிமக்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளது.
அதில், ‘பிரான்ஸ் குடிமகள் ஒருவர் இஸ்லாமியரை திருமணம் செய்துக்கொண்டால், அதனை எவ்வாறு எடுத்துக்கொள்வீர்கள்? பிரான்ஸ் நாட்டில் இனப்பாகுபாடு, மத வேற்றுமை, மதத்தின் காரணமாக தாக்குதல்கள் நடைபெறுகிறதா? என பொதுமக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வுக்கான முடிவுகள் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு வார பத்திரிகையில் கடந்த ஞாயிற்றுகிழமை வெளியாகியுள்ளது.
அதில், ‘பிரான்ஸில் உள்ள யூதர்கள் ஆதரவு இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என 91 சதவிகித மக்கள் கூறியுள்ளனர். சுமார் 56 சதவிகித மக்கள் ‘யூதர்களுக்கு ஆளும் திறமை அதிகம் இருக்கிறது’ என கருத்து கூறியுள்ளனர்.
ஒருவருடைய மதத்தை அடிப்படையாக கொண்டு அவர் மீது தாக்குதல்கள் நடைபெறுவது உண்மை தான் என 23 சதவிகித மக்கள் கூறியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் குடியேறுவதால் அந்நாட்டிற்கு பயன் ஏதும் இல்லை என சுமார் 54 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஆனால், இறுதியாக எழுப்பப்பட்ட கேள்வி சமூக வலைத்தளங்களில் பலத்தை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘பிரான்ஸ் குடிமகள் ஒருவர் இஸ்லாமியரை திருமணம் செய்துக்கொண்டால், அதனை எவ்வாறு உணர்வீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு 56 சதவிகித மக்கள் ‘இதனை நாங்கள் மிக மோசமாக உணர்வோம்’ என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், இனவெறியை தூண்டும் இதுபோன்ற கருத்து கணிப்புகளை எடுத்தது கண்டனத்துக்குரியது என இணையத்தளவாசிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
‘இஸ்லாமியம் என்பது ஒருவரின் நடத்தை பற்றியது அல்ல. அது ஒரு மத நம்பிக்கை. இதனை எதற்காக கருத்து கணிப்பில் ஒப்பிட வேண்டும் என சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சர்ச்சையின் உச்சக்கட்டமாக, இதுபோன்ற கருத்து கணிப்புகள் எடுப்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்களும் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக