பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுத்து ஸ்கேன் எடுக்காததால் கர்ப்பிணிப் பெண்ணின் சிசு உயிரிழந்த பரிதாபம் பீகாரில் நடந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
பாட்னாவைச் சேர்ந்த ரஞ்சன்சிங், கடுமையான வயிற்று வலியால் துடித்த அவரது கர்ப்பிணி மனைவியை அங்குள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர் உடனடியாக அல்ட்ரா ஸ்கேன் எடுத்து வருமாறு கூறியுள்ளார். அவரது பரிந்துரையின்பேரின் அல்டாரா ஸ்கேன் சென்டருக்கு சென்ற ரஞ்சன் மனைவிக்கு ஸ்கேன் எடுக்க கட்டணமாக 500, 1000 ரூபாய் பழைய நோட்டுக்களை கொடுத்துள்ளார். அதனை அவர்கள் வாங்க மறுத்து ஸ்கேன் எடுக்காமல் விட்டுவிட்டனர்.
ரஞ்சன் தனது மனைவிக்கு ஸ்கேன் எடுக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் எந்தப் பலனும் இல்லாமல் போனது. இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் சிசு இறந்துவிட்டது.
தற்போது, அந்த தம்பதியினர் குழந்தையை இழந்து தவிக்கின்றனர். மேலும், பழைய ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்ததால் சிசு இறந்த பின்னர் அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட இரத்தப் போக்கினை கட்டுப்படுத்த ஊசி மருந்து மாத்திரைகள் வாங்க முடியாமல் ரஞ்சன் தவித்துள்ளார். அதன் பின்னர் உடம்புக்கு முடியாத மனைவியின் தவிப்பை தாங்கிக் கொள்ள முடியாத ரஞ்சன் 3, 4 மணி நேரம் காத்துக் கிடந்து வங்கியில் பணம் எடுத்து சிகிச்சை அளித்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணிற்கு எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. இந்தச் சம்வம் பாட்னா மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக ஸ்டேட் வங்கியில் காத்துக் கிடந்த 65 வயதுடைய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் சுரேந்திர குமார் சர்மாவும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணம் எடுக்க காத்துக்கிடந்த லால்மணி என்ற 50 வயதுடைய பெண்ணும் செவ்வாய்க்கிழமை அங்கு பலியானதாக கூறப்படுகிறது.
கடந்த 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் 500,1000 ரூபாய் பழைய நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக