இஸ்லாமிய மார்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். புனித ரமலான் மாதத்தின்போது இந்த கடமையை இஸ்லாமிய பெருமக்கள் நிறைவேற்றுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ஈகைத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். அதன்படி, இந்தாண்டு ரமலான் பண்டிகை நேற்று கொண்டாடப்படுவதாக இருந்தது. ஆனால் பிறை தெரியாததை அடுத்து ஜூலை 7 ம் தேதி (இன்று) ரமலான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், கேரளா, காஷ்மீர், தமிழகத்தின் சில பகுதிகள் உள்ளிட்டவற்றில் நேற்றே ரமலான் கொண்டாடப்பட்டது.
பாகிஸ்தான் ஆப்கனிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளிலும் ஏமன், பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலும் ரமலான் திருநாள் கொண்டாடப்பட்டது.
அங்கு பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் கூடிய ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் ரமலான் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
புத்தாடை அணிந்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கியும் இஸ்லாமியர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரமலானை முன்னிட்டு டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் ஏராளமான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்.
பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக