இன்று மாலை 6.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து கோலாலம்பூர் பன்னாட்டு விமானநிலையத்திற்கு 151 பயணிகளுடன் புறப்பட்டது ஏர் ஏசியா விமானம்.
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.
உடனே விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழல்.
மெட்ராஸ் விமானநிலையம் செல்லும் சாத்தியக்கூறும் ஆராயப்பட்டது.
ஏனெனில் அவசர கால லேண்டிங் (எமர்ஜென்சி லேண்டிங்) செய்ய தேவையான ஓடுதள நீளம் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் இல்லை. ஓடுதள நீளமானது 8,136 அடி மட்டுமே.
இந்த நீளமுடைய ஓடுதளத்தில் எமர்ஜென்ஸி லேண்டிங் செய்வது ஏற்புடையது அல்ல, விமானம் தீப்பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால்,
பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்து எரிபொருளை ஒரு குறிப்பிட்ட அளவு எரித்த பின்னர் சுமார் 7.15 க்கு எமெர்ஜென்சி லேண்டிங் அறிவிக்கப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
சுமார் 75 நிமிடங்கள் விமானம் வானில் வட்டமடித்தபோது உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வேண்டாதகடவுளை எல்லாம் துணைக்கு கூப்பிட்ட பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்த அசாதாரண சூழலுக்கு காரணம், ஓடுதள (ரன்வே) பற்றாக்குறையே. தேவையான ஓடுதளம் இருந்திருப்பின், 75 நிமிடங்கள் வானில் தேவையின்றி வட்டமடிக்கத் தேவையில்லை, பயணிகளுக்கு உயிர்பயம் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமாநிலையத்தின் ஓடுதள விரிவாக்கத்திற்கு தேவையான, விமானநிலைய ஆணைக்குழுமம் கடந்த ஆறரை ஆண்டுகளாக கேட்டு எதிர்பார்த்துக்கொண்டு காத்துள்ள நிலத்தை, தமிழகஅரசு கையகப்படுத்தித் தர இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகுமோ?
தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள தற்போதைய அதிமுக அரசு இந்த நீண்டகால, திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி சார்ந்த பிரச்சினைக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் தந்து, தீர்த்து வைக்குமா? என பயணிகள் எதிர் பார்த்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக