கல்வியை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், பள்ளிப் படிப்பை முடிக்காதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும், ஆரம்ப கல்வியை நிறைவு செய்யாமல் படிப்பை இடையிலேயே நிறுத்திவிடும் மாணவர்களின் எண்ணிக்கை 36 சதவீதம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், அனைவரும் படிக்கும் வகையில், கல்வி கொள்கையில் மாற்றங்களை கொண்டுவர மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், 10ம் வகுப்பு வரை இலவச கல்வியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் சாதாரணமாக பெறப்படும் கட்டணம் கூட வசூலிக்காமல் இலவச கல்வி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் அமலுக்கு வருகிறது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8ம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாய கல்வி முறை இருந்துவரும் நிலையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘9 மற்றும் 10 வகுப்பு பாடத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்த சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளோம். கல்வி கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருவதோடு, பள்ளி கல்வியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக