Breaking News
recent

குடும்ப அட்டையின் அவசியம் என்ன ?அவசியம் என்னவென்று படித்துபாருங்கள்.!


பொதுவிநியோகத் திட்டத்தில் பொருட்கள் பெற மட்டுமல்லாது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கக்கூடிய ஆவணமாகவும், இருப்பிடச் சான்றுக்கான மிக முக்கிய ஆவணமாகவும் பயன்படுகிறது.
தனியாக புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையவர் யார்?
*************************************************************
1). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும்.
3). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
4). விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் இந்தியாவில் எங்கும் குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது.
5). விண்ணப்பதாரரோ மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ்நாட்டில் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்க கூடாது.
6). விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.
குடும்ப அட்டைகளின் வகைகள்:
(விருப்பங்களின் அடிப்படையில் )
*********************************************************
அனைத்து அத்தியாவசிய பொருட்கள் .குடும்ப அட்டைகள் ( பச்சை நிற அட்டைகள் ) அரிசி மற்றும் இதர இன்றியமையாப் பொருட்கள் பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பச்சை நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் ( வெள்ளை நிற குடும்ப அட்டைகள்) அரிசிக்கு பதிலாக சர்க்கரை பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சர்க்கரை விருப்ப அட்டை ( வெள்ளை நிறம் ) வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி*க்கு பதிலாக 3 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படுகிறது.
எந்த பொருளும் பெற விருப்பமில்லை என்ற குடும்ப அட்டைகள். வெள்ளை நிற குடும்ப அட்டைகள்: பொது விநியோக திட்டத்தின் கீழ் எந்த பொருளும் வாங்க விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு, எப்பொருளும் வேண்டா ( வெள்ளை நிறம் ) குடும்ப அட்டை வழங்கப்படுகின்றன.
குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம்?
******************************************************************
தமிழக அரசு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்ணயித்துள்ளது . இப்படிவம் http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf
என்ற இணைய தளத்தில் உள்ளது. பயன்படுத்த விரும்புவோர் படிவத்தினை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து எடுத்து பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள் என்னென்ன?
**************************************************************
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கீழ்கண்ட ஆவணங்களின் நகல் ஒன்றை இணைக்க வேண்டும்.
1. தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றாக தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை, மூன்று மாதங்களுக்குள்ளான வீட்டு வரி / மின்சாரக் கட்டணம் / தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீதுகளில் ஏதாவது ஒன்று அல்லது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் / பாஸ்போர்ட் நகல்/ வாடகை ஒப்பந்தம் இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் போதுமானது. ஒரு வேளை இந்தச் சான்றுகள் ஏதும் இல்லையென்றால், நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் பெற்றுக் கொடுக்கலாம்.
2. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கப்பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று.
3. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கும் அதிகாரியிடம் (TSO) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
4.முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் குடும்ப அட்டை இல்லை என்ற சான்று.
5.எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர் போன்றவை அடங்கிய விவரங்கள் கொடுக்க வேண்டும்.
6.விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தை வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகைச் சீட்டை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவுத் தபாலில் அனுப்புவர்கள் சுயமுகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.
விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
**********************************************
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்பு ஆவணங்கடன் அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் (மண்டல) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவர் வசிக்கும் பகுதி எந்த உதவி ஆணையாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்தால் தொலைபேசி மூலம் இந்த அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியைச் சார்ந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வட்ட வழங்கல் அலுவலர், உதவி பங்கீட்டு அலுவலர்*, (கோயம்புத்தூர் நகரம் மட்டும்) குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வார்கள்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்புகை சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இருந்தபோதிலும் விண்ணப்பம் சென்றடைந்ததை உறுதி செய்துக் கொள்ள ஆதாரமாக ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பது நல்லது.
மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா?
***********************************************************************
கூடுதல் ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டியது இருந்தால் தவிர, மனுதாரர் 30 நாட்களுக்கு முன்னதாக உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொள்ள தேவையில்லை.
விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் மனுவின் மீதான இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
விண்ணப்பம் தகுதியுடையதாக இருந்தால், குடும்ப அட்டை அச்சிட அனுப்பப்படும். அச்சிடப்பட்ட குடும்ப அட்டை உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் பெறப்பட்டவுடன்* அலுவலகத்திலிருந்து ஒப்புகைச்சீட்டுடன் 15 தினங்களுக்குள் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளுமாறு அஞ்சல் அட்டை மனுதாரருக்கு அனுப்பப்படும்.
ஒரு வேளை, விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தை விண்ணப்பித்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மனுதாரருக்கு அஞ்சல் அட்டை மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப படிவத்தில் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் குறிப்பிட்டிருந்தால், விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட இறுதி முடிவின் நிலையினை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
ரேஷன் கார்டு விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் யாரிடம் முறையீடு செய்வது ?
*************************************************************************
சென்னை நகர் மற்றம் புற நகர் பொறுத்த வரையில் துணை ஆணையாளர் (நகரம்) வடக்கு மற்றும் துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அவர்களிடம் மேல் முறையீடு செய்யலாம் .
பிற பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாம்.
குடும்ப அட்டை குறித்து எங்கே புகாரளிப்பது?
*******************************************************************
வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளருக்கும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய வேண்டும் அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும் அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
மாநில நுகர்வோர் மையத்தை 044 2859 2858 என்ற எண்ணில் தொலைபேசியிலோ, consumertn.gov.in, schtamilnadugmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் பொய்யான அல்லது தவறான தகவல்களை அளித்தால்?
****************************************************************************
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு தோராயமாக ஆண்டுக்கு ரூ.2000/- மானிய செலவு ஆகிறது என்பதை விண்ணப்பதாரர் அறிந்து கொள்ள வேண்டும். எனவே குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான விவரங்கள் மற்றும் தவறான முகவரி அளித்தல் போன்றவை பொது விநியோக திட்ட பொருட்களை கடத்துதலுக்கு வழிகோலும் என்பதுடன் 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பண்ட சட்டம் பிரிவு 7 ன் கீழ் தண்டனைக்குரியதாகும். இத்தகைய விண்ணப்பதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டப் படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் சரியான குடும்ப உறுப்பினரின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர் தனது குடும்ப அட்டையினை எவ்விதம் பெற்றுக் கொள்ள வேண்டும் ?
*********************************************************************
குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலகத்தில் தயாராக உள்ளது என்ற தகவலை விண்ணப்பதாரர் பெறப்பட்டவுடன், 15 தினங்கக்குள் நேரடியாக திங்கள் அல்லது வெள்ளிக் கிழமை அல்லது அஞ்சல் அட்டை, சிக்கன சேமிப்பு தகவல் / மின்அஞ்சல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பம் சமர்ப்பித்த பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகை சீட்டுடன் கொடுத்து குடும்ப அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை, அசல் குடும்ப அட்டை தொலைந்து விட்டால் , நகல் அட்டை பெற விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக மனுதாரர் குடும்ப அட்டையின் முதல் பக்கமும் கடைசி பக்கமும் நகல் எடுத்து அல்லது குடும்ப அட்டை எண் ,கடையின் குறியீடு எண் ஆகியவற்றை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை, குடும்ப தலைவர் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வர இயலவில்லை என்றால் குடும்ப தலைவர் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் அதிகாரம் அளிப்பு கடிதத்துடன் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள அனுப்பலாம். குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள வரும் உறுப்பினரின் கையொப்பத்தினை மனுதாரர் மேலொப்பம் செய்து அங்கீகாரம் அளிப்பு கடிதம் அளிக்க வேண்டும். இந்த அதிகாரம் வழங்கப்பட்ட நபர் விண்ணப்பம் வழங்கிய பொழுது பெறப்பட்ட அசல் ஒப்புகைச் சீட்டினை சமர்ப்பித்து குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
உதவி ஆணையாளர்/ வட்ட வழங்கல் அலுவலர் அங்கிகாரம் செய்யப்பட்ட நபர் சந்தேகப்படும் வகையில் இருப்பின் குடும்ப அட்டை வழங்குவதை மறுக்கலாம்.
புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
*********************************************************************
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெற ரூ.10/- கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த தொகை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் / வட்டவழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்படும்.
குடும்ப அட்டை தொலைந்து போனால்:
***********************************************************
தொலைந்து போன குடும்ப அட்டையின் நகலுடன் ஏதாவது ஓர் அடையாள அட்டையின் நகலையும் சேர்த்து கிராமப்புறங்களில் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும், நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையரையும் அணுக வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புதுக் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைத்துவிடும். இதற்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.
பெயர் நீக்கம் மற்றும் பெயரை சேர்க்க
என்ன செய்ய வேண்டும்?
***********************************************************
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்றால் குடும்ப தலைவர் விண்ணப்ப படிவம் மற்றும் ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும். குடும்ப தலைவர் மரணம் அடைந்திருந்தால், இறப்பு சான்றுடன் அவரது வாரிசுதாரர் மனு கொடுக்கலாம். பெயர் சேர்க்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குடும்ப
தலைவர் அதற்கான விண்ணப்பிக்க படிவத்தை அளிக்க வேண்டும்.
மேலதிக விவரங்களுக்கு:
****************************************
தங்கள் பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
உங்கள் பகுதியின் பொது விநியோகக் கடைக்கான பொருட்களின் ஒதுக்க்கீடு குறித்து அறியhttp://cscp.tn.nic.in/allotmentver2/repallotmentshopwise.jsp இத்தளத்திற்குச் செல்லவும்.
http://egov-civilmis.pon.nic.in/SearchCardPondyAppNo.aspx புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் இத்தளத்திற்குச் சென்று விண்ணப்பத்தின் நிலையறியலாம்.
மேலும் விவரங்களை அறிந்துகொள்ள http://www.consumer.tn.gov.in/fairprice.htm
இத்தளத்திற்குச் செல்லவும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.