தினக் குடியரசு (Cumhuriyet daily ) என்ற துருக்கிய பத்திரிக்கையில் கட்டுரையாளர்களாக பணிபுரிந்து வரும், செய்ட்டா கரன் மற்றும் கிக்மெத் செட்டின்கயா ஆகிய இருவரும் கடந்த வருடம் எழுதிய கட்டுரை ஒன்றில், பிரான்ஸின் ’சார்லி ஹெப்டோ’ பத்திரிக்கையில் வெளியான, முகம்மது பற்றிய கேலிச் சித்திரத்தை மறு பிரசுரம் செய்தனர்.
இது பெரும் சர்ச்சையை எழுப்பியதை அடுத்து, துருக்கி போலீசார் அந்த பத்திரிக்கையின் வாகனங்களை தடுத்து நிறுத்தி அந்த பிரதிகளை கைப்பற்றினர்.
மேலும் போராட்டக்காரர்கள் பலர் அந்த கேலிச் சித்திரத்தை பிரசுரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்த பத்திரிக்கை பிரதிகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
பத்திரிக்கை வழியாக மக்கள் மத்தியில் வெறுப்பையும் பகையும் வளர்ப்பதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இஸ்தான்புல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் தனித்தனியே 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அந்த பத்திரிக்கையாளர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தண்டனை பற்றி கருத்து தெரிவித்த பலரும், இது பத்திரிக்கை சுதந்திரத்தை அடக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக