புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை குறைப்பதற்காக சிகெரட் விற்பனையில் புதிய நிபந்தனையை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
நாட்டில் புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை குறைப்பதற்கான பரிந்துரைகளை தெரிவிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு தற்போது தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அதன்படி பெட்டி கடைகளில், சிகரெட்டை சில்லரையாக விற்பதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட புகையிலை தொடர்பான கடுமையான கொள்கைகளை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் கடைகளில் சிகரெட்டை ஒன்று, இரண்டு என எண்ணிக்கை கணக்கில் சில்லரையாக விற்பதற்கு தடை விதிக்க வேண்டும்; புகையிலை தயாரிப்பு பொருட்களை விற்பதற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது வரம்பை அதிகரிக்க வேண்டும்;
சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களுக்கான 2003 ஆண்டு சட்டத்தின் சில விதிகளை மீறுவோருக்கான அபராத தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசிடம் நிபுணர் குழு சமர்பித்துள்ளது.
இந்நிலையில் இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளை தெரிவிப்பதற்கான வரைவு குறிப்பு அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நத்தா, மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கான மேற்கூறிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டால், அது இந்திய புகையிலை பொருட்கள் தயாரிப்பு துறையில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக