அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் தங்களது சுற்றுலாத்துறையை மேம்படுத்தும்விதமாக விசா அனுமதியினை எளிதாக்கியுள்ளது. அந்நாட்டின் தலைவரான இளவரசர் சல்மான் பின் ஹமட் அல் கலிபா இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு அமைச்சரவை கூட்டத்தில் புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தினார்.
இதனால் வரும் அக்டோபர் மாதம் முதலான விசாவிற்கான விண்ணப்பங்கள் மின்னணுமயமாக்கப்பட்டு இந்தியா உட்பட 35 நாடுகளுக்கு இந்த வசதிகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. எளிதான ஆன்லைன் விண்ணப்பம் மூலம் விசா பெறும் இந்தத் திட்டம் இதனைத்தொடர்ந்து மொத்தம் 101 நாடுகளுக்கு வழங்கப்படுகின்றது.
மேலும், வரும் 2015ஆம் ஆண்டு முதல் இந்திய மக்கள் பஹ்ரைனில் அதிக நாட்கள் தங்கமுடியும். புதிய திட்டத்தின்கீழ் ஒரு மாதத்திற்கு அளிக்கப்படும் இந்த விசா அனுமதியினை ஒருவர் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளமுடியும்.
இதுதவிர பல நுழைவு விசாவும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஹ்ரைனில் அதிக அளவிலான இந்தியர்கள் பயணம் மற்றும் வேலை நிமித்தமாக இருப்பதால் இந்த புதிய திட்டம் அவர்களுக்கான பயணத்தை எளிதாக்கும் என்று கருதப்படுகின்றது.
அதுமட்டுமின்றி இந்தியா பஹ்ரைனின் முக்கியமான வர்த்தக கூட்டாளியாகவும் விளங்கி வருகின்றது. கடந்த 2011ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற வர்த்தகத்தின் மதிப்பு 1.7 பில்லியன் டாலர்களைவிட அதிகரித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை கொண்ட வர்த்தகம் மற்றும் முதலீட்டு முறைகளின் அடிப்படையிலேயே இந்நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதை வரலாறு தெரிவிக்கும் என்று அந்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சரான கமல் பின் அகமது தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக