Breaking News
recent

அமீரகத்தில் VPN பயன்படுத்தினால் 2,000,000 திர்ஹம் அபராதம்.!


அமீரகத்தில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக புதிய பல சட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. அதில் ஒன்றாக ஒருவர் தனது இணையதள பயன்பாட்டை VPN மூலம் பாதுகாத்தால் இந்த புதிய சட்டம் மூலம் அவரை கைது செய்வதோடு மட்டுமல்லாது அவருக்கு 500,000 திர்ஹம் முதல் 2,000,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.

VPN ( Virtual Private Network) என்பது ஒருவர் இணைய தளத்தை பார்வையிடும் போது அவருக்கும் அந்த இணையதளத்திற்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தை பிறர் பார்வையில் இருந்து மறைத்து பாதுகாப்பான இணைப்பை வழங்கும் சேவை. இதன் மூலம் பொது இடங்களில் உள்ள இனைய தள இணைப்பை பயன்படுத்துவோர் பாதுகாப்பான முறையில் தங்களது மின்னஞ்சல்களை பார்வையிடவோ வங்கியில் பண பரிவர்த்தனைகள் செய்யவோ இயலும்.

முன்னதாக இந்த சட்டம் மூலம் VPN பயன்படுத்தி இணையதள குற்றம் புரிபவர்களை மட்டுமே கைது செய்ய முடியும் என்றும் தற்போது மாற்றியமைக்கப்பட்ட இந்த சட்டம் மூலம் VPN பயன்படுத்தும் எவரையும் கைது செய்ய முடியும் என்று அமெரிக்காவை மையமாக கொண்ட Private Internet Access அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தின் படி அமீரகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் எந்த ஒரு தளத்தையும் VPN பயன்படுத்தி பார்த்தால் அது குற்றமாகக் கருதப்படும். தற்போது அமீரகத்தில் வசிக்கும் மக்களில் அதிகம் பேர் அப்பகுதியில் தடை செய்யப்பட்டிருக்கும் அலைபேசி செயலிகளை பதிவிறக்க VPN ஐ பயன்படுத்தி வருகின்றனர். 

குறிப்பாக இலவச Voip சேவையை வழங்கும் பல அலைபேசி செயலிகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய பெரும்பாலான மக்கள் VPN சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 

இது போன்ற VOIP சேவைகள் மூலம் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தவிர்க்க இத்தகைய சட்டங்கள் ஏற்ப்படுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக இணையதளம் பயன்படுத்தோவோரின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தபடுவது தான் இந்த VPN சேவை. பெரும் நிறுவனங்கள் பல தங்களது பணியாளர்களை தகவல் பாதுகாப்பிற்காக VPN பயன்படுத்த அறிவுறுத்தும் இந்த வேலையில் தொலை தொடர்பு நிறுவனங்களின் பேராசைக்காக மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அமீரகத்தின் இந்த சட்டம் அதிர்ச்சியை தருகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.