அமீரகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் அமீரக தலைவர்கள் பங்கேற்றனர்.
துபாய் உள்ளிட்ட அமீரகம் முழுவதும் புதன்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்கள் நோன்பிருந்த பின்னர் ஷவ்வால் பிறை 1-ஐ பார்த்த பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ரம்ஜான் பண்டிகை அமீரகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அமீரகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. இந்த தொழுகையில் அமீரக தலைவர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
திடல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைக்கு பொதுமக்கள் தங்களது வீட்டிலிருந்தே ’ஒளு’ ( தொழுகைக்கு முன்னர் தண்ணீரை வைத்து முகம், கை, கால்களை கழுவுவது ) செய்து விட்டு சென்றனர்.
துபாய் ஜாபில் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகையில் துபாய் ஆட்சியாளரும் அமீரக பிரதமரும், துணை அதிபருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் பங்கேற்றார்.
துபாய் பட்டத்து இளவரசரும், துபாய் எக்ஸிகியூடிவ் கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், துபாயின் துணை ஆட்சியாளர் மேதகு ஷேக் மக்தூம் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், துபாய் துணை ஆட்சியாளரும், அமீரக நிதி மந்திரியுமான மேதகு ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம், மந்திரிகள், ஷேக்குகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து தங்களது அரண்மனைகளில் பெருநாள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டனர்.
இதேபோல் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் அந்தந்த அமீரகங்களின் ஆட்சியாளர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உற்சாகமாக ஈகைத் திருநாளைக் கொண்டாடினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக