ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பெத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுதாராணி. இவரது கணவர் மகேஷ். தம்பதியருக்கு ரீட்டா(6), பவன்(5) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
மகேஷ் குவைத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து குவைத்தில் இருந்து சொந்த ஊரான ரொம்பிசெர்லாவுக்கு வந்து 2 மாதம் சிகிச்சை பெற்ற அவர் மீண்டும் குவைத் சென்றார்.
அப்போது, மந்தரபல்லியை சேர்ந்த நண்பர்கள் பாலசுப்பிரமணியம், கிரண் ஆகியோர் குவைத்தில் உள்ள தங்களது சித்தியான சித்தம்மா என்பவரிடம் கொடுத்துவிடும்படி, ஒரு பார்சலை கொடுத்துள்ளனர். அதை வாங்கிக்கொண்டு மகேஷ் குவைத் சென்றார்.
அந்நாட்டின் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மகேஷ் கொண்டு வந்த பார்சலை சோதனை செய்தபோது அதில் போதை பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வாரம் தனது மனைவியுடன் போனில் தொடர்பு கொண்டு பேசிய மகேஷ், போதை பொருள் வழக்கில் அடுத்த வாரம் தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
எந்த தவறும் செய்யாத மகேஷை குவைத் போலீசார் கைது செய்து, மரண தண்டனை விதிக்க உள்ளதாகவும், போதை பொருள் கொடுத்து அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், மகேஷின் பெற்றோர் பீலேரு போலீசில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே, மகேஷிடம் பார்சல் கொடுத்தனுப்பிய பாலசுப்பிரமணியன், கிரண் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். மகேஷூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தள்ளி வைக்க அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக