டாக்காவில் உள்ள ஹோலி ஆர்ட்டிஷன் என்ற பேக்கரிக்குள் புகுந்த தீவிரவாதிகள், பலரை சுட்டுக் கொன்றனர்.
பணயக் கைதிகளாக பிடிபட்டிருந்த 18 பேர், கமாண்டோ படையினர் நடத்திய அதிரடி தாக்குதலின் மூலம் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கையில் ஆறு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தற்போது அந்த பேக்கரிக்குள் நடந்த நிகழ்வுகளை பணயக் கைதியாக இருந்த ஒருவர் விவரித்துள்ளார்.
"நாங்கள் உள்ளூர் நபர்களை கொல்லப்போவதில்லை.
வெளிநாட்டவர்களை மட்டுமே கொல்லப்போகிறோம். இந்த வெளிநாட்டவர்களின் வாழ்க்கை முறை, உள்ளூர் மக்களையும் இவர்களை பின்பற்ற தூண்டுகிறது " என்று சொல்லி இருக்கிறான் ஒரு தீவிரவாதி.
கொலை செய்யப்பட்டவர்களில் 9 இத்தாலியர்கள், 7 ஜப்பானியர்கள், இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள், அமெரிக்கர் ஒருவரும், ஒரு இந்தியரும் அடங்குவர் .
அங்கு இருந்த வெளிநாட்டவர்களை கொன்ற போதும், உள்ளூர் மக்களிடமும், பேக்கரியின் ஊழியர்களிடமும் பரிவுடன் நடந்து கொண்டிருக்கிறார்கள் தீவிரவாதிகள்.
ஆனால், அங்கு இருந்த ஒரு இஸ்லாமிய மாணவரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.
தனது நண்பர்களையும், பிற பணயக்கைதிகளையும் விட்டு வெளியே செல்ல முடியாது எனக் கூறி இருக்கிறார் அந்த இளைஞர்.
ஃபாராஸ் ஹூசைன் என்ற அந்த பங்களாதேஷ் இளைஞர், அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்தார்.
அவருடன் மேற்கத்திய கலாச்சார உடையில் இரு பெண்களும் அந்த பேக்கரியில் உணவருந்திக்கொண்டு இருந்தனர்.
இவர் ஒரு பங்களாதேஷ் இஸ்லாமியர் என தெரிந்ததும், அங்கே இருந்த தீவிரவாதிகள், இவரை வெளியே செல்ல அனுமதி அளித்து இருக்கிறார்கள்.
இவருடன் இருந்த பெண்கள் எந்த நாட்டவர் என விசாரித்து இருக்கிறான் தீவிரவாதி. ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
ஹூசைனை, அவர்கள் வெளியே செல்ல அனுமதித்த போதும், அவர் வெளியே செல்லவில்லை. தனது நண்பர்களையும், பணயக்கைதிகளையும் விடுவித்தால் மட்டுமே செல்வேன் என கூறி இருக்கிறார் ஹூசைன். கொலை செய்யப்பட்ட 20 நபர்களில் ஹூசைனும் ஒருவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக