வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் கடந்த 1–ந் தேதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். இதனால் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது.
ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவர் தற்போது மத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மெக்கா சென்றுள்ளார். 11–ந்தேதி மும்பை திரும்புவார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் டாக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராகவும், அவரது அமைப்பிற்கு தடை விதிக்க வலியுறுத்தியும் மும்பை, நாக்பாடாவில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் தொடர்பாக விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய மும்பை போலீஸ் கமிஷ்னருக்கு உத்தரவிட்டு உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக