தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளைக் கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட 12 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இந்தப் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 1400 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 20 ஆயிரம் மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.
இந்த நிலையில் பிளஸ் 2 முடித்துவிட்டு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிவிட்டன.
பல கல்லூரிகளில் புதிய மாணவர்களை சீனியர் மாணவர்கள் வரவேற்கிறார்கள்.
இருப்பினும் ராக்கிங் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனரகம் அனைத்து கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், "கல்லூரி மாணவ–மாணவிகளிடையே ராக்கிங் நடக்காதவாறு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியவற்றை கருத்தில் கொண்டு செயல்பட சென்ற ஆண்டு அறிவுரை வழங்கியது போல இக்கல்வி ஆண்டிலும் (2016–2017) தங்கள் கல்லூரியில் ராக்கிங் நடக்காமல் இருக்க தாங்கள் முன்எச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராக்கிங் பற்றி உடனடியாக புகார் செய்ய தேர்வாகி உள்ள ஆசிரியரின் பெயர் மற்றும் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும்.
ராக்கிங் புகார் பெட்டி மற்றும் ராக்கிங் ஆலோசனை பெட்டியினை அமைத்து ராக்கிங் கொடுமையினை அறவே ஒழிக்க முன் ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர்களும், துறைத்தலைவர்களும் கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒவ்வொரு கல்லூரியிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்துக் கடிதம் எழுதவேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
அண்மையில், கர்நாடக மாநிலம், குல்பர்காவில் உள்ள அல் ஓமர் கல்லூரியில் நர்சிங் படித்து வந்த கேரள மாணவிக்கு, சீனியர் மாணவிகள் டாய்லெட் கிளீனரை குடிக்க வைத்து ராக்கிங் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக