அமீரகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2– ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு துபாய் ஆட்சியாளரும், அமீரக பிரதமரும், துணை அதிபருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:–
அமீரகத்தின் 50–ம் ஆண்டு நிறைவு விழா முடிவில் செவ்வாய் கிரக பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மொத்தம் 2 ஆயிரம் கோடி திர்ஹாம் செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பயணத்தின் அனைத்து ஏற்பாடுகளும் முழுக்க முழுக்க அமீரகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்த செவ்வாய் பயணக் குழுவில் பங்கு பெறும் விண்வெளி வீரர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் அனைவரும் அமீரகத்தை சேர்ந்தவகர்களாக இருப்பார்கள். வரும் 2021–ம் ஆண்டு அரபு நாடுகளிலேயே முதல் விண்வெளி பயணத்தை தொடங்கிய பெருமையை அமீரகம் பெறும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மேலும் பழமையான தபால் தலையை வெளியிட்டு அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–
இந்த தபால் தலை எனது தந்தையும் மறைந்த துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் ராஷித் 1964–ம் ஆண்டில் வெளியிட்டார். இந்த வரலாற்று சிறப்புமிக்க தபால் தலையை தொலைநோக்கு பார்வையுடன் என் தந்தை அப்போதே வெளியிட்டுள்ளதை காணலாம். இதில் அமீரகத்தின் விண்வெளி ராக்கெட் ஒன்று வானில் சீறிப் பாயும் காட்சி இடம்பெற்றுள்ளது.
மேலும் இதில் ரேஞ்சர்–7 என்ற விண்கலத்தின் படம் இடம் பெற்றுள்ளது. இதுதான் முதன் முதலாக நிலவை மிக அருகில் படமெடுத்த அமெரிக்க விண்கலமாகும். இந்த விண்கலம் 1964–ம் ஆண்டு ஜூலை 28–ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
இந்த தபால் தலையின் அடிப்பக்கத்தில் ‘விண்வெளி வீரர்களை கவுரவப்படுத்துகிறோம்’ என்ற வாசகங்கள் இடம் பெற்றிருப்பதின் மூலம் அப்போதே அமீரகத்தின் விண்வெளி அறிவியலில் நாங்கள் கண்ட கனவை இன்றும் நினைத்துப் பார்க்க முடிகிறது.
இவ்வாறு துபாய் ஆட்சியாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக