எத்தனையோ உயிர்களைப் பறித்த பிறகும் செல்ஃபி மேனியா மாறாதது ஆச்சரியம் அளிக்க, செல்ஃபி பிரியர்களிடையே பீதியைக் கிளப்பியிருக்கிறது லேட்டஸ்ட் செய்தி!
லண்டனை சேர்ந்த பிரபல வலைப்பதிவாளரான 26 வயது மெஹ்ரின் பெய்க் ஒருநாளைக்கு 50 செல்ஃபிக்கு மேல் எடுத்து இன்ஸ்டாகிராமிலும், வலைப்பக்கத்திலும் பதிவு செய்வாராம்.
கடந்த வாரம் ஒருநாள் தன் முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்களையும், கருப்புநிற திட்டுகளையும் பார்த்த மெஹ்ரின் பயந்து சரும நோய் நிபுணரிடம் சென்று பரிசோதித்ததில்
செல்போனிலிருந்து வெளிப்படும் நீலநிறக் கதிர்களே முகத்தில் ஏற்பட்டுள்ள சுருக்கங்களுக்கு காரணம் என்று தெரிய வந்திருக்கிறது.
இந்த செய்தியை அமெரிக்க தினசரியான ‘தி டெய்லி மெயில்’ வெளியிட்டு பரபரப்பு பட்டாசை கொளுத்தி போட்டுள்ளது. அடடா! நம்மூர் இளசுகளும் ‘செல்ஃபி’ பைத்தியம் பிடித்து திரியறாங்களே!
சரும நோய் நிபுணர் ஏ.ருக்மணியிடம் சந்தேகத்தை எழுப்பினோம். ‘செல்ஃபி’ மோகம் எந்த வயதினரையும் விட்டு வைக்கவில்லை என்பதென்னவோ உண்மை.
மொபைலில் இருந்து வெளிப்படும் Non Ionising Radiation மற்றும் LED ஒளியானது சருமத்தில் உள்ள நுண்துளைகள் வழியாக அடிப்பகுதிக்குள் ஊடுருவுவதால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தி மெலனின் பிக்மென்ட் (Melanin pigment) உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
செல்கள் பழுதடைந்து முகத்தில் கரும்புள்ளிகளையும் கருந்திட்டுகளையும் ஏற்படுத்துவதோடு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கிறது.
செல்போன் மூலம் அடிக்கடி முகத்தை புகைப்படம் எடுக்கும்போது, இந்த ஒளிக்கதிர்களால் முகங்களில் சுருக்கம் ஏற்பட்டு, வயதுக்கு மீறிய தோற்றம் உண்டாகலாம்.
மணிக்கணக்கில் செல்போன் உபயோகிக்கும் போது, இவற்றில் உள்ள குரோமியம், நிக்கல் போன்ற உலோகங்கள் சருமத்துடன் நேரடித் தொடர்பு ஏற்படுத்துவதால் அலர்ஜி மற்றும் தடிப்புகளும் உண்டாகும்.
மொபைலில் இருந்து வெளிப்படும் LED ஒளி, ஆக்சிஜன் எதிர்வினை புரிவதால் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றி வயதான தோற்றத்தை ஏற்படுத்துவதோடு, சருமப் புற்றுநோய் வருவதற்கான அபாயங்களும் உண்டு.
எல்லாவகை எெலக்ட்ரானிக் பொருட்களிலிருந்தும் வெளிப்படும் நீலக்கதிர்கள் UVA மற்றும் UVB விளக்குகளுக்கு நிகராக கெடுதல்கள் விளைவிப்பவை.
இப்போதைய சூழலில் பணியிடங்களிலும் தொழில்முறையிலும் எெலக்ட்ரானிக் உபயோகத்தை தவிர்ப்பது சாத்தியமில்லை என்பதால், பயன்படுத்தும் நேரத்தையும் எண்ணிக்கையையும் குறைத்துக் கொள்ளலாம். 3 வயதுக் குழந்தைகள் கூட செல்ஃபி எடுக்கின்றனர்.
செல்போனை குழந்தைகள் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது’’என்கிறார் டாக்டர் ஏ.ருக்மணி.
செல்ஃபியால் உண்டாகும் ஆரோக்கியக் கேடு, மனநலக் கோளாறு, விபத்து என எல்லா அபாயங்களையும் பலமுறை பேசிவிட்டோம்.
அழகையும் இளமையையும் தக்கவைத்துக் கொள்ளவாவது செல்ஃபி’யை குறைத்துக் கொள்வார்கள் என்று நம்புவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக