பா.ஜ.க ஆளும் ஹரியானா மாவட்டத்தில் மாட்டிறைச்சி கடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டி இருவரை பசு பாதுகாவலர்கள் கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கி மாட்டுச் சாணத்தை உண்ண வைத்திருக்கிறது.
குர்கோன் பகுதி காவ் ரக்ஷக் தள் அமைப்பின் தலைவர் தர்மேந்திரா யாதவ் என்பவர் தாங்கள் ரிஸ்வான் மற்றும் முக்தியார் என்ற இருவரை மாட்டு சாணம் உன்ன வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இவரகள் இருவரும் 700 கிலோ மாட்டிறைச்சி கடத்துவதாக தகவல் கிடைத்ததாகவும் அதன் அடிப்படையில் இவர்களை துரத்திப் பிடித்ததாகவும் இவர்களுக்கு பாடம் கற்பிக்கவும் மேலும் அவர்களை தூய்மை படுத்தவும் மாட்டுச் சாணம், கோமியம், பால், நெய், தயிர் ஆகிய கலவையை உண்ணக் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
இவர்களின் வாகனத்தை 7 கிலோ மீட்டர் துரத்தி பிடித்ததாக அவர் கூறியுள்ளார். ரிஸ்வான் மற்றும் முக்தியார் ஆகிய இருவரை பாசு பாதுகாவலர்கள் துன்புறுத்தும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.
இதில் இவர்களை இந்த கழிவுகளை உண்ணக் கூறியும் “காவ் மாதா கி ஜே” என்றும் “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிடக் கோரியும் பசு பாதுகாவலர்களால் வற்புறுத்தப்படுவது பதிவாகியுள்ளது. இந்த கழிவுகளை உண்ண முடியாமல் அந்த இருவர் வாந்தி எடுப்பதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.
இதனையடுத்து இந்த இருவரும் ஃபரிதாபாத் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்நிலைய அதிகாரி அணில் குமார் கூறுகையில், அந்த வாகனத்தின் ஓட்டுனரையும்
அவரது உதவியாளரையும் தாங்கள் ஜூன் 10 ஆம் தேதி கைது செய்துள்ளதாகவும், அவர்களது வாகனத்தில் இருந்தது மாட்டிறைச்சி தான் என்றும் இந்த இருவர் தற்பொழுது தங்களது கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இவர்கள் மாட்டுச் சாணம் உண்ண வைக்கப்பட்டது குறித்த தகவல் ஏதும் காவல்துறைக்கு வரவில்லை என்றும், அந்த சம்பவம் நிகழும் போது காவல்துறையினர் அங்கு இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள வீடியோ உண்மையெனில் அது குறித்து வழக்கு பதிவு செய்யப்படும் என்று ஃபரிதாபாத் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சுபே சிங் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக