வடகிழக்கு டெல்லியின் சீலாம்பூரில் நேற்று முன்தினம் நடந்த இப்தார் நோன்பு திறப்பில் முதல்வர் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
அவருடன் மாநில மின்சாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் சென்றிருந்தார்.
முதல்வர் வருகையையொட்டி அரசு மற்றும் டிஸ்காம் தரப்பில் அதிகாரிகளும், ஏராளமான மக்களும் திரண்டிருந்தனர்.
இப்தாருக்குப் பின்னர், அங்கிருந்த பிஎஸ்இஎஸ் அதிகாரி ஒருவரை அருகில் அழைத்த முதல்வர் கெஜ்ரிவால், ‘‘பழைய டெல்லி, சீலாம்பூர்,
பராஷ் கானா, பல்லிமரான், நயி சடக், சவ்ரி பஜார், ஜும்மா மசூதி உள்பட பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.
மின்வெட்டுக்கு காரணம் கூறுங்கள்’’ என்றார். அதற்கு பதிலளித்த அதிகாரி ‘‘மின்சாரம் ஏந்திச் செல்லும் ஒயர்கள் வலுவிழந்து பழுதடைவதால் மின் தடை ஏற்படுகிறது.
மேலும், தேவை அதிகரித்து இருப்பதால், அதிக பாரம் காரணமாக மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்), அடிக்கடி பழுதடைகிறது.
டிரான்ஸ்பார்மர்களில், தற்காலிக பராமரிப்பு பணிகள் மட்டுமே செய்ய முடிகிறது.
மின்சார விநியோகம் சீராக நடைபெறுவதற்கு, புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவுவதற்கு இடம் ஒதுக்கும்படி டெல்லி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.
அதைக் கேட்ட கெஜ்ரிவால், ‘‘அப்படியானால், நான் வரும்போது மட்டும் டிரான்ஸ்பார்மர்கள் எப்படி சரியாக வேலை செய்கிறது?’’ என கடிந்து கொண்டார்.
அதன் பின்னர், அப்பகுதி எம்எல்ஏ முகமது இஷ்ரக்கை அழைத்து, ‘‘புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவ, உடனே நிலம் ஒதுக்கீடு செய்யுங்கள்’’ என கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக