தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கடந்த 23-ந் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது.
முன்னதாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்ற உடன், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் திட்டத்திற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்.
அதன்படி இந்த திட்டம் அன்று முதல் அமலுக்கு வந்தது. இருந்தாலும் இதற்கான முறையான அரசாணை நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியாக அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்மூலம், மின்சாரசட்டத்தின்படி இதனை அமல்படுத்த மின்சார வாரிய தலைவருக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
எனவே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
அத்துடன் இதற்காக கூடுதலாக ரூ.1,607 கோடி நிதி தேவைப்படுகிறது. பட்ஜெட்டில் மின்சார மானியத்திற்காக இந்த நிதி மின்சார வாரியத்துக்கு ஒதுக்கப்படும். இதுதொடர்பாக அரசு அரசாணையை வெளியிட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக