2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சருமான ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷா கடந்த 2011 ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்றிரவு திடீரென செய்தியாளர்களை சந்தித்த, அரியலூர் மாவட்டம், அய்யூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர், தான் "தமிழர் நீதிக்கட்சியின்" தலைவர் சுப.இளவரசனனின் உதவியாளர் என்றும், ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோருடன் சேர்ந்து சாதிக் பாட்ஷாவை கொலை செய்ததாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த ரகசியத்தை தற்போது வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் துப்பு துலக்க ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்ஷாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இந்த சூழலில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்ஷா பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், திமுக புள்ளிகளின் அழுத்தத்தின்பேரிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், பிரபாகரன் அளித்துள்ள இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக