தனது மகளுக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க தனியாக வாழும் தாய் ஒருவர், டெல்லி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை நாடினார். அப்போது விண்ணப்பத்தில் தந்தையின் பெயர் குறிப்பிடவில்லை என கூறி பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பத்தை அலுவலகம் நிராகரித்தது.
இதையடுத்து அந்த பெண் தனது மகளுக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி மன்மோகன், பாஸ்போர்ட் வழங்க தந்தையின் பெயர் அவசியம் இல்லை எனக் கூறி அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உத்தரவிட்டார்.
உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தபோது அவரது தந்தை மனைவியை தவிக்கவிட்டு சென்றுவிட்டார். பெண் குழந்தை பிறந்ததை ஏற்க மறுத்து அவர் இவ்வாறு செய்துள்ளார்.
தற்போது திருமணம் ஆகாமலே குழந்தை பிறப்பது, பாலியல் தொழிலாளர்கள், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், வாடகை தாய் உள்ளிட்ட பிரச்னைகளால் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தந்தை பெயர் இல்லை என்பதால் அவரது விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலக கம்ப்யூட்டர் நிராகரித்துள்ளது.
தந்தை, யார் என்பது சட்டப்படியான தேவை அல்ல. செயல்முறை சார்ந்த தேவை. மேலும் அந்த பெண்ணின் கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையிலும் அவரது தந்தை பெயர் இடம் பெறவில்லை. எனவே மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தனியாக வாழும் அந்த பெண்ணின் தாயின் நிலையை கருத்தில் கொண்டு அவரது மகளுக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக