நோன்பு நோற்காவிட்டால் ஒரு பாவமாக ஆகிவிடுமோ என்ற குற்ற உணர்வில் பல சங்கடங்களையும் பொறுத்துக் கொண்டு பலர் நோன்பு நோற்கின்றனர் .
இவர்கள் இவ்வாறு நோன்பு நோற்பதைப்பற்றிச் சற்று நோக்குவோம்.
இலங்கையில் நோன்பு நோற்கும்போது பதின்மூன்று மணி நேரம் எதுவும் உண்ணாமலும் பருகாமலும் இருக்க வேண்டும்.
இவ்வாறு நீண்ட நேரம் பட்டினியாக இருந்தால் கர்ப்பிணியான தாய்க்கோ அல்லது அவரது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கோ ஏதாவது பாதகங்கள் ஏற்படுமா?
1964 -– 84 காலப்பகுதியில் இங்கிலாந்தின் பேர்மிங்ஹம் பகுதியில் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றோருக்குப் பிறந்த 13,351 குழந்தைகளின் பிறப்பு நிறையை முஸ்லிம் அல்லாத குழந்தைகளின் பிறப்பு நிறையுடன் ஒப்பிட்டபோது எந்தவிதமான வித்தியாசங்களும் காணப்படவில்லை..
இவ்வாறு பல ஆய்வுகள் ரமழான் மாத நோன்பினால் சிசுவின் பிறப்பு நிறையில் எந்த விதமான குறைவும் ஏற்படுவதில்லை என்று நிறுவி உள்ளன.
கர்ப்பகாலத்தில் நோன்பு நோற்றோரின் பிள்ளைகளின் கல்வி நிலையை அவதானித்தபோது அந்த சிறுவர்களின் விவேக ஈவில் (IQ) எந்த வித குறைபாடும் காணப்படவில்லை.
இஸ்லாத்தின் நிலைப்பாடு
அல்குர்ஆன் இரண்டாம் அத்தியாயம் 183, 184, 185 ஆம் வசனங்களில் நோன்பைப்பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“...ஆனால் (அந்த நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னர் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பிராயச்சித்த தானமாக ஏழைக்கு உணவளிக்க வேண்டும்”
இந்த வசனங்களை கர்ப்பவதியான பெண்கள் எப்படி எடுத்துக்கொள்வது?
(a)கர்ப்பிணியான பெண்ணை ஒரு சிறிது கால நோயாளியாகக் கருதினால் அவர் ரமழானில் நோன்பை விட்டு விட்டுப் பின்னர் அவற்றை நோற்க வேண்டும்.
(b)அவர்களைக் கடுமையான நோயாளிகளாகக் கருதினால் நோன்பு நோற்கத் தேவையில்லை. ஆனால் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
(c)கர்ப்பிணிக்கு எந்த வித சங்கடமும் இல்லையென்றால் அவர் ரமழானில் நோன்பு நோற்க வேண்டும்.
(d)கர்ப்பிணியைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படாததால் அவர் ரமழானிலோ அல்லது அதன் பின்னரோ நோன்பு நோற்கத் தேவை இல்லை. பிராயச்சித்த தானம் கொடுக்கத் தேவையும் இல்லை .
இந்த நான்கு அபிப்பிராயங்களில் எது ஏற்புடையது?
கர்ப்பவதியான பெண்களும் பாலூட்டும் தாய்மாரும் நோன்பு நோற்கத் தேவை இல்லை என்று அநேக ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்துள்ளார்கள். (உதாரணமாக Sunan Ibn Majah English Ref: Vol.1, Book 7, Hadith 1666, Sunan Abi Dawud English Ref. Book 13, Hadith 2401.)
இப்படியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளிப்பதற்கான காரணம் என்ன?
நிறைந்த தேகாரோக்கியம் மிக்க ஒருவருக்கு ரமழான் நோன்பினால் அநேக மருத்துவ நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் கர்ப்பிணியான ஒரு பெண்ணை நிறைந்த ஆரோக்கியம் உள்ள ஒருவராகக் கருத முடியாது . கர்ப்பகால இரத்த அழுத்தம் (preeclampsia), நீரிழிவு (Gestational diabetes mellitus), இரத்தக் குறைவு(Anaemia) போன்ற பல நோய்களால் அவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அதிகமான தளர்வு, களைப்பு மற்றும் சோர்வு நிலை என்பவற்றால் அவதியுறுகின்றார்கள். நோன்பு நோற்கும்போது இவைகளின் பாதிப்புக்கள் அதிகமாகின்றன.
நோன்பு நோற்கும் கர்ப்பவதியான பெண்களில் வயிற்றுக் குமட்டலும் வாந்தியும் (vomiting) அதிக அளவில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. நீரைக் குறைவாகக் குடிப்பதாலும் அதிக நேரம் பருகாமல் இருப்பதாலும் சிறுநீரகத் தொகுதியில் கிருமிகள் தொற்ற வாய்ப்புண்டு.
சிசுவின் சுவாச அசைவுகள் குறையலாம் என்று சிலர் கருதுகின்றார்கள். அதேநேரத்தில் இப்படியான நோய்கள் இடம்பெற வாய்ப்பிலை என்றும் சிலர் கருதுகின்றார்கள்
கர்ப்ப காலத்தின்போது அதிக நேரம் பட்டினியாக இருந்தால் அந்தக் குழந்தைகள் பிற்காலத்தில் இருதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகின்றது. ஆனால் பதினைந்து மணி நேரத்திற்கும் குறைவாக நோன்பு நோற்கும்போது இந்தத் தாக்கங்கள் ஏற்படாது.
கர்ப்பவதியான பெண்கள் நோன்பு நோற்பதால் குழந்தைகளுக்குக் குறுகிய காலங்களில் ஏற்படும் விளைவுகளைப்பற்றித்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதே தவிர நீண்ட கால விளைவுகள் பற்றி முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கிய சலுகையைப் பலவிதமாக அர்த்தம் கொள்கின்றார்கள்.
(a)தாய்க்கோ அல்லது கருவில் உள்ள சிசுவுக்கோ ஆபத்துக்கள் விளையக்கூடிய சூழல் இருந்தால் மட்டுமே நோன்பு நோற்கத் தேவை இல்லை. இப்படியான அபாயங்கள் இல்லாவிடில் கட்டாயம் நோன்பு நோற்க வேண்டும் என்று ஒரு சாரார் கருதுகின்றார்கள்
(b) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்துள்ளதால் கர்ப்பவதிகள் நோன்பு நோற்க வேண்டிய அவசியமே இல்லை என்று இன்னுமொரு சாரார் கருதுகின்றார்கள்.
நோன்பு நோற்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
ரமழான் மாதத்தில் கர்ப்பவதிகள் நோன்பு நோற்காவிட்டால் பிள்ளை பெற்றபின்னர் அவர்கள் செய்ய வேண்டியது என்ன? இவை பற்றி நான்கு விதமான அபிப்பிராயங்கள் கூறப்படுகின்றன
(a)பிள்ளை பெற்ற பின்னர் விடுபட்ட அத்தனை நோன்புகளையும் கணக்கிட்டு நோற்க வேண்டும். அத்துடன் விடுபட்ட நாள் ஒன்றுக்கு 750 கிராம் வீதம் அரிசியைத் தானமாக வழங்க வேண்டும். (Minhaju 's-Salihiyn, vol. 1, p. 334).
நான்கு மத்ஹபுகளின் இமாம்களும் கர்ப்பவதிகள் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்காமல் விட்டால் பின்னர் விடுபட்ட நோன்புகளைக் கணக்கிட்டு நோற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார்கள். ஆனால் அரிசியைத் தானமாகக் கொடுப்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
(b) விடுபட்ட நாள் ஒன்றுக்கு 750 கிராம் வீதம் அரிசியைத் தானமாக வழங்கினால் போதுமானது. நோன்பு நோற்கத் தேவை இல்லை என்று சிலர் கருதுகின்றார்கள்.
கர்ப்பவதியோ அல்லது பாலூட்டும் பெண்ணோ நோன்பு நோற்பதைக் கஷ்டமாகக் கருதினால் அவர்கள் தானம் கொடுத்தால் போதுமானது. பின்னர் அந்த நோன்புகளை நோற்கத் தேவை இல்லை என்று At-Tabari in His Tafsîr (Exegesis) (hadith 2318). Al-Albâni said in “Al- Irwâ'“ (4/19), Abu Dâwûd (hadith 2318), ,At-Tabari in His Tafsîr (Exegesis) (2/136), and Ad-Dâraqutni in his “Sunan” (2/206) என்பனவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
றமழான் காலத்தில் கர்ப்பமாக இருந்த தன்னுடைய மனைவியிடம் இப்ன் உமர் (ரழி ) அவர்கள், நோன்பு நோற்கத் தேவை இல்லை. பின்னர் அதைக் கணக்கிட்டு நோற்கவும் தேவை இல்லை. ஆனால் தானம் வழங்குமாறு குறிப்பிட்டதாக Ad-Dâraqutni in his “Sunan” (2/207). இல் கூறியுள்ளார்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் .ரமழானில் விடுபட்ட நோன்புகளுக்குப் பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்ற வசனத்தை இப்னு உமர் (ரழி) அவர்கள் ஓதிவிட்டு இந்த வசனம் கூறும் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்றார்கள் (புகாரி 1949)
ஆகவே நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் நோன்பிற்கு பதிலாக ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற விளக்கம் தவறானதாகும்
(c) விடுபட்ட அத்தனை நோன்புகளையும் கணக்கிட்டு நோற்க வேண்டும். அரிசியைத் தானமாக வழங்கத் தேவை இல்லை. இது தென்னிந்திய மற்றும் சிறி லங்கா தௌஹீத் ஜமாஅத்தினரின்(SLTJ) நிலைப்பாடு ஆகும்.
(d ) விடுபட்ட நோன்புகளை நோற்கத் தேவை இல்லை. அரிசியையும் தானமாகக் கொடுக்கத் தேவையும் இல்லை. என்பது வேறுசிலரது கருத்தாகும்.
அல்லாஹ் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பைக் கடமையாக்கவில்லை. இவர்கள் நோன்பு நோற்கக் கூடாது என்பதற்கு பின்வரும் ஹதீஸ் சிறந்த ஆதாரமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'நிச்சயமாக அல்லாஹ் பிரயாணியை விட்டும் தொழுகையின் அரைவாசியையும், மேலும் பிரயாணி, கர்ப்பமுற்றவர், பாலூட்டுபவர் ஆகியோரை விட்டும் நோன்பையும் நீக்கி விட்டான்.' அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்: இப்னு ஹுஸைமா 2042. நீக்கிவிட்டான் என்றால் அது நிரந்தரமாக இல்லாமலாக்குவதைக் குறிக்குமா? நீக்கிவிட்டான் என்பதற்கு இங்கு ஹதீஸில் 'வழஅ' என்ற பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இவ்வார்த்தைக்கு சிலர் 'சலுகையளித்துள்ளான்' என அர்த்தம் செய்கின்றனர். இது தவறாகும். நிரந்தரமாக இல்லாமலாக்குவதையே இவ்வார்த்தை குறிக்கின்றது என்று விளக்கம் அளிக்கின்றார்கள்.
இவ்விரு சாராரும் நோன்பு நோற்கக் கூடாது எனக் கூறிய இஸ்லாம் இவ்விரு பிரிவினரும் பின்னர் நோன்பு நோற்க வேண்டும் என எங்கும் குறிப்பிடவில்லை இவர்கள் நோன்பு நோற்காமல் விட்டதற்கு பிராயச்சித்த தானம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று விளக்கம் கொடுக்கின்றார்கள். (விடிவெள்ளி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக