Breaking News
recent

மூன்றாம் ஆண்டில் மோடி...730 நாட்களும் 'ஏழரை' சர்ச்சைகளும்..!


2014- ல் வாக்களிக்கும் முன் வாக்காளர்களான எங்களை வரவேற்று இரு கதவுகள் திறந்துகிடந்தன. முந்தைய பத்து ஆண்டுகள் தொடர்ந்து இந்த நாட்டை ஆண்டு, நிலக்கரி, 2ஜி, காமன்வெல்த் என ஊழல் முகங்களாக குற்றம் சாட்டப்பட்டு, வாய் பேசாத அரசாங்கமாகவே செயல்பட்டு, முடங்கிக் கிடந்த காங்கிரஸ் என்ற இல்லத்தின் கதவு ஒன்று. மற்றொரு கதவு பாஜகவினுடையது. 

சமூக வலைதளங்கள் மூலம் மோடி ஏற்படுத்திய அதிர்வலைகளுக்கும், ' ஆப் கி பார் , மோடி சர்க்கார் ' என்ற மந்திர சொற்களுக்கும், இந்திய மக்கள் மட்டும் அல்ல, வெளிநாடு வாழ் மக்களும் சொக்கிப்போனார்கள். அது, தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்தது. 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

இன்றுடன் மோடி பிரதமராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிகின்றன. மூன்றாம் ஆண்டை நோக்கி காலண்டரில்  முன்னேறி இருக்கும் மோடியின் ஆட்சி, மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? 

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தது என்ன ?


சமூக வலைதளங்களில் மோடியைப் பற்றி சிறு விமர்சனம் செய்தால்கூட, அதை எதிர்த்து ஒரு கூட்டம் கிளம்புகிறது. 'சரியாக தூங்காமல்கூட  காலை 3 மணிக்கே எழுந்து இந்தியாவிற்காக உழைக்கத் துவங்குகிறார்' என ஹேஷ்டேக் போட்டு கிறுகிறுப்பு தருகிறார்கள் அவர்கள். மோடியை கடவுளாகவே வழிபடும் கூட்டம் பரவலாக இருக்கிறது. 

குவிந்த திட்டங்கள்


'ஸ்டார்ட்-அப் இந்தியா', 'ஸ்வச் பாரத்' (க்ளின் இந்தியா ), 'டிஜிட்டல் இந்தியா', 'மேக் - இன் இந்தியா' என இந்தியாவின் பெயர்களில் திட்டங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. 'க்ளின் இந்தியா' திட்டத்திற்காக  பிரபலங்கள் குப்பை அள்ளும் நிகழ்வுகள் அரங்கேறின. அந்த புகைப்பட குப்பைகளைக்கூட அள்ள நேரம் இல்லாமல், அடுத்த திட்டத்திற்கு பெயர் வைக்க கிளம்பிவிட்டார் மோடி. 

'அனைவருக்கும் வங்கி கணக்கு' என திட்டம் கொண்டுவந்து, 1.5 கோடி வங்கி கணக்குகள் புதிதாக துவக்கப்பட்டன. ஆனால் அந்த கணக்குகள் பலவும் செயல்படாத கணக்காகத்தான் மாறி உள்ளன. மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு எந்தவிதமான வழிவகையும் செய்யாமல் வங்கி கணக்கு ஆரம்பித்து எந்தப் பயனும் இல்லை.
பெட்ரோல், டீசல்

2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் அறிவித்த பெட்ரோல், டீசலின் விலை ஏற்றத்தை எதிர்த்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய அளவிலான போராட்டத்தை அறிவித்தது. காங்கிரஸ் ஆட்சியில் இப்படி ஒவ்வொரு முறை விலை ஏற்றம் செய்யப்பட்டபோதும்  போராட்டங்களால் காங்கிரஸை தகித்தது பாஜக. தற்போது, அதை செய்யும் நிலையில்கூட எதிரணியான காங்கிரஸ் இல்லை என்பது வேறு விஷயம். பெட்ரோல், டீசல் விலையை தீர்மானிப்பது எண்ணெய் நிறுவனங்கள் தான் என்றாலும், அதை கட்டுப்பாட்டில் வைக்கும் அதிகாரம் கூடவா ஆளும் அரசாங்கத்திற்கு இல்லாமல் போய்விட்டது.
ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெயின் பேரல் விலைக்கும், சில மாதங்களுக்கு முன் கச்சா எண்ணெய் பேரல் விலைக்கும் 100 டாலர்கள் வரை வித்தியாசம் இருந்தது. கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக சரிந்தபோது பெட்ரோல், டீசல் விலை அந்த அளவு குறையவில்லை. அதற்கு பதிலாக கலால் வரி உயர்த்தப்பட்டது. கச்சா எண்ணெய்யின் விலை சரிவினால் அதிக லாபம் ஈட்டியது எண்ணெய் நிறுவனங்கள்தான்.

இருசக்கர வாகனத்தை பெரும்பான்மையாக பயன்படுத்தும் மத்திய தர வர்க்கத்தின் குரலாக இதை கேட்கிறேன். குறைந்தபட்சம் டீசல் விலையையேனும் குறைத்து இருந்தால், விலைவாசி எவ்வளவோ குறைந்து இருக்கும்? ஒரு பாமரனுக்குக் கூட எளிதில் புரியும் இந்த விஷயம், உலகம் சுற்றும் மோடிக்கு தெரியாமல் போனது ஏன் என்பது புரியவில்லை.
சகிப்புத்தன்மை 

உணவிற்காக ஒரு விலங்கை கொல்வது தவறில்லை என இந்திய சட்டம் சொல்கிறது. ஆனால், தாத்ரியில் 52 வயதான மொஹம்மத் அக்லாக் என்பவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக கொல்லப்படுகிறார். இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல, இந்துக்கள் சிலரும் கூட மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். 
ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வளவு ஏன், டெல்லியில் இருக்கும் கேரள அரசின் விடுதியில் மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறதா என எந்தவித அனுமதியுமின்றி, சோதனை நடத்தியது மத்திய அரசின் கீழ் இயங்கும் டெல்லி காவல்துறை. 
கன்னட எழுத்தாளர் கல்பர்கி, பாஜகவின் சகிப்பின்மைக்கு பலியான மற்றொரு நபர்

மொஹம்மத் அக்லாக் , கல்பர்கி என இந்த இரு சம்பவங்களுக்குப்பின், பல எழுத்தாளர்கள் சகிப்புத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பினர். நயன்தாரா ஷேகல் சாகித்திய அகாடமி தனக்கு தந்த விருதை திருப்பிக் கொடுத்தார். தொடர்ந்து 30க்கும் அதிகமானோர் மத்திய அரசு தங்களுக்கு அளித்த கவுரவ விருதுகளை திருப்பி அளித்து தங்கள் கண்டனத்தை பதிவுசெய்தனர்.
'Incredible india ' விளம்பரங்களில் இருந்து, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சத்யமேவ ஜயதே' வரை அமீர்கானை கொண்டாடிய அதே தேசம், அவரின் உருவபொம்மையை எரித்தது வீதிகளில். இந்தியாவில் நிலவும் மத துஷ்பிரயோகங்களுக்கு பயந்து வெளிநாட்டில் வாழலாம் என கருத்து அமீர்கானின் மனைவி சொன்னதற்காகத்தான் இப்படி ஒரு எதிர்வினையாற்றினர். பாஜகவின் சகிப்புத்தன்மை பல்இளித்த வரலாறு இது.

அதாவது எதைக்கண்டு ஒரு குடும்பம் அஞ்சியதோ, அதையே அவர்களுக்கு செய்து காட்டி மேலும் மிரள வைப்பதுதான் இந்த தேசத்தை வழிநடத்துபவர்களின் நாகரீக செயலா? அதேசமயம் தாத்ரி முதல் ஆமிர்கான் சம்பவம் வரை அரசுக்கு ஆதரவு குரல் கொடுத்த பாலிவுட் நடிகர் அனுபம் கெருக்கு உடனடியாக பத்ம பூஷன் 'பரிசில்' தந்து 'கவுரப்படுத்துகிறது'. 

இதன் மூலம், மோடியின் சொல்ல வரும் கருத்துதான் என்ன? இத்தனை களேபரங்களுக்கும் விடைசொல்லவேண்டிய மோடி, அவற்றை 'ஜஸ்ட் லைக் தட்' புறந்தள்ளிவிட்டு, விமானத்தில் ஏறி வெளிநாட்டிற்கு பயணம் சென்றது எந்த அறத்தின்கீழ் வரும்? மோடியின் ஆதரவாளர்கள்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.
வறுமை ஒழிப்பா? இல்லை காங்கிரஸ் ஒழிப்பா ?

"இந்துக்களும் இஸ்லாமியர்களும் அவர்களுக்குள் சண்டையிடுவதை விட்டுவிட்டு , வறுமைக்கு எதிராக போராடுங்கள்" என கடந்த அக்டோபரில் ஆற்றிய ஒரு உரையில் குறிப்பிட்டார் மோடி. முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விஷயம். ஆனால், ஒரு அரசாக , இப்படி செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது தானே முறை. சுதந்திர இந்தியாவில் 49 ஆண்டுகளை காங்கிரஸ் தான் ஆண்டது. ஒன்றை அழிக்க வேண்டும் என்றால், அதன் பெயரை முதலில் வேறு பெயராக மாற்ற வேண்டும் என்பது மோடி அரசிற்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது. 'இந்திரா காந்தி ராஜ்சபா புரஸ்கார், ராஜிவ் காந்தி ராஷ்ட்ரிய க்யன் - விக்யன் மௌலிக் புஸ்டக் லேகன் புரஸ்கர் '  போன்ற விருதுகள், திட்டங்களில் இருந்து, நேரு குடும்பத்து பெயர்கள் அதிரடியாய் நீக்கப்பட்டன .

அரசின் திட்டங்களில் தனிநபரின் பெயரால் அழைக்கப்படுவது சரியல்ல என்பதால் இது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும், அரசின் அத்தனை திட்டங்கள் எல்லாவற்றிலும், இதனை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் தலைவர்களை மட்டும் குறிவைத்ததுதான் மோடியின்  ராஜதந்திரத்தை துகிலுரித்தது.
விளம்பர மோகமும், செயல்பாடுகளும்

2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் , வெளிநாட்டு பயணத்திற்காக மோடி அணிந்த சட்டை, உலக அளவில் பிரபலம் ஆனது. மோடியும் , ஒபாமாவும் பேசிய உலகப் பொருளாதார விஷயங்கள் தலைப்பு செய்திகளாக வருவதற்கு பதில், சட்டையின் விலை 1 கோடி என்றும், அதில் பொன் எழுத்துக்களில் அவரது பெயர் பொறிக்கப்பட்டு இருப்பதும்தான் தலைப்புச் செய்தி ஆனது.  இந்தியாவின் கோடிக்கணக்கான ஏழைமக்களின் வறுமையை போக்குவதற்காக திட்டமிடும் ஒருவர்  இத்தனை ஆடம்பரத்தை வெளிப்படுத்துவது தனிப்பட்ட அவரது வாழ்க்கைக்கும் அரசியல் நிலைப்பாட்டிற்கும் உள்ள முரணை வெட்ட வெளிச்சமாக்குகிறது. 

இப்போது வரையில், கேமராவிற்கு போஸ் தரும் மோடியை நக்கல் செய்யாத ஊடகங்களே இல்லை. கார்டியன், ஹஃபிங்டன் போஸ்ட் என நக்கல் பரந்துவிரிந்தது தான் மிச்சம். 
பத்தாண்டுகள் காங்கிரஸின் மன்மோகன் சிங் பேசாமலே கெடுத்தார் என்றால், மோடி சமீப காலமாக அரசியலுக்காக பேசும் சில விஷயங்கள் கடும் சர்ச்சையை கிளப்புகிறது. கொல்கத்தாவில் கடந்த மாதம் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலர் இறந்தனர். " இங்கே அவல ஆட்சி நடக்கிறது என்பதை குறிப்பிட நமக்கு கடவுள் சொல்லும் செய்திதான் இது " என திருவாய் மலர்ந்தருளினார் மோடி. இருந்தாலும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அவல ஆட்சியே தொடரட்டும் என 211 இடங்களில் வெற்றி பெறச் செய்திருக்கின்றனர் மக்கள். “சோமாலியாவைவிட, கேரளாவில் பெண் சிறார்களின் பிறப்பு சதவிகிதம் குறைவு” என பேசி கேரளாவிலும் வாங்கிக்கட்டிக்கொண்டார் .
இந்தியாவில் படிப்பறிவு மிக்க மாநிலம் என்பதைக் காட்ட, மோடிக்கு எதிராக கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸும் இணைந்து #pomonemodi என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் ட்ரெண்டாக்கினார்கள். மோடியை காண்டாக்கினார்கள்.
மத்திய பல்கலைகழகங்களும் மத்திய அரசும். 

'ஹோட்டல் மெனு கார்டில் ஜாதி பார்க்கப்படுகிறதா' என்கிற மாணவர்களின் டாக்குமென்டரியை தம் வளாகத்தில் ஒளிபரப்ப தடை செய்தது JNU பல்கலைக்கழகம்.அம்பேத்கர் இயக்கத்தின் சார்பாக போராட்டங்கள் செய்ததால், ரோஹித் வெமுலா என்ற பல்கலைக்கழக ஆய்வு மாணவரின் உதவித்தொகையை ரத்துசெய்தது பல்கலைக்கழகம். வெறுத்துப்போன அவர் தற்கொலை செய்துகொண்டார். 

இறந்த வெமுலாவிற்கு, ஒருவாரம் கடந்த நிலையில் அனுதாபக் கடிதம் ஒன்றை அனுப்பினார் மோடி. 'இந்தியத்தாய் ஒரு மகனை இழந்துவிட்டார்' என்று சொல்வதற்கு மோடி எடுத்துக்கொண்ட கால அவகாசம் ஒருவாரம். அதே மோடிதான் ஆனால், தமிழகத்தில் கடந்த வாரம் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும்போதே ஜெயலலிதா 'வெற்றிபெற்றதற்கு' வாழ்த்து தெரிவித்தார்.  இது என்ன 'மோடி அரசியல்'?
நன்றி-விகடன் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.