இறை பணிகளிலேயே மிக உயர்ந்த பணி ஓர் ஏழைக்கு கல்வி கண் திறப்பதுதான். அதை சிறப்பாக செய்து வருகிறது சென்னையின் இதயப் பகுதியான அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜித்.
அண்ணாசாலையக் கடந்து செல்லும் அனைவருக்கும் இது தொழுகை நடத்தும் ஒரு மசூதியாக மட்டுமே தெரியும். மௌலானா ஷம்சுதீன் காசிமி என்பவரை இமாமாக (குருவாக) கொண்ட இங்கே, சிறப்பான இறை பணியுடன் கல்வி பணி, வட்டியில்லா கடன் வழங்குதல், குடும்ப பிரச்னைகளை தீர்த்து மறுவாழ்வு அளிக்கும் சேவை எனப் பல நல்ல சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, 'அழகிய கடன் அறக்கட்டளை' என்ற பெயரில் கடந்த 2012-ல் இருந்து மக்கா மஸ்ஜித்தில் தகுதியான முஸ்லிம் மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. முதல் வருடத்தில் 28 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த வருடம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் உட்பட 75 பேர் இந்த அறக்கட்டளையின் கீழ் பயின்று வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் ஜூன் மாதம் விண்ணப்ப படிவங்கள் அளிக்கப்பட்டு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆகஸ்ட் இறுதியில் வகுப்புகள் தொடங்கப்படும்.
2014-ல் இங்கு பயிற்சி பெற்ற அஷ்ரப் என்ற மாணவர், குடிமைப் பணிகளுக்குத் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பயிற்சி பெறுவோர், தமிழ்நாடு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்று வருகின்றனர்.
இந்த அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் ஆரிப் அஹமது இதுகுறித்து கூறுகையில், "அல்லாஹ்வின் துணையோடு, ஒவ்வோர் ஆண்டும் இன்னும் அதிகமான மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த இலவச சேவை கிடைக்க முயன்று வருகிறோம்" என்றார்.
தொடரட்டும் இந்த மகத்தான சேவை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக