Breaking News
recent

உளுந்தூர்பேட்டையை திமுகவிடம் திருப்பி அளித்தது மனித நேய மக்கள் கட்சி.!


மனித நேய மக்கள் கட்சி உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுகவிடம் திருப்பி அளித்துள்ளது. அத்தொகுதியில் திமுக சார்பில் வசந்தவேல் போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது.

நடைபெறவிருக்கும் தமிழக தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுகவிடமே திருப்பி அளித்துவிட்டதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா அறிவித்தார்.

இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜவகிருல்லா, உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுகவிடமே திருப்பி அளித்துவிட்டதாகக் கூறினார்.  எனினும், திருப்பி அளித்ததற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

இதையடுத்து உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் திருநாவலூர் ஒன்றியத்தின் துணைத் தலைவர் வசந்தவேல் போட்டியிடுவார் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இதனால் வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே மனித நேய மக்கள் கட்சி தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

ராமநாதபுரம்- எம்.எச்.ஜவாகிருல்லா, தொண்டாமுத்துர்- எம்.ஏ.செய்யது முஹம்மது, நாகப்பட்டிணம்- ஏ.எம்.ஜபருல்லா, ஆம்பூர்- வி.எம்.நஜீர் அஹமது.

ஆம்பூர் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இருக்கும் அஸ்லாம் பாஷாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.