திருச்சி ரயில் நிலையத்தில் 7 பிளாட்பாரங்கள் உள்ளன. முதல் பிளாட்பாரத்தில் வரும் ரயிலில் பயணிப்பவர்களுக்கு அதிக பிரச்னை இருக்காது. நுழைந்தவுடன் சில அடி தூரத்தில் ரயிலில் ஏறிவிடலாம்.
ஆனால் மற்ற பிளாட்பாரங்களுக்கு செல்ல வேண்டுமானால் சுரங்கப்பாதையில் ஏறி இறங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கைக்குழந்தைகளுடன் செல்லும் பெண்கள், லக்கேஜ் மூட்டை முடிச்சுகளுடன் செல்பவர்கள், கர்ப்பிணிகள் என பலர் இந்த சுரங்க பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இவ்வழியே செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். சிரமத்தை குறைக்க பேட்டரி கார் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வாங்கப்பட்டது. இதில் ஏறி அமர்ந்தால் குறிப்பிட்ட பிளாட்பாரத்திற்கு எளிதில் செல்லலாம். இந்த கார் தண்டவாளங்களை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இப்படி தண்டவாளத்தை கடக்கும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ரயில்வே உயர் அதிகாரிகள் தடை விதித்தனர். இதன் காரணமாக பேட்டரி கார் முதல் பிளாட்பாரத்திற்கு மட்டுமே இயக்க கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டது.
மற்ற பிளாட்பாரங்களுக்கு செல்பவர்களுக்கும் பேட்டரி கார் கண்டிப்பாக இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் திருச்சி ரயில் நிலைய 5வது பிளாட்பாரம் வந்தது.
ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் சுரங்க பாதை வழியாக ரயில்நிலையத்திற்கு வெளியே வந்தனர். குருவாயூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் 5வது பிளாட்பாரத்தில் நின்ற காரைக்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். பிறகு 20 நிமிடத்தில் அங்கேேய இறந்துவிட்டார்.
பிளாட்பார்ம்க்கு பேட்டரி கார் இயக்கப்பட்டிருந்தால் அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் என பயணிகள் தரப்பில் ரயில்வே நிர்வாகம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து தமிழ் முரசு இதழில் ‘அட்ராசிட்டி’ பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று மாலை முதல் திருச்சி ரயில்நிலையத்தில் பேட்டரி கார் இயக்கப்பட்டது பொதுமக்களிடைய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக