Breaking News
recent

வாய்க்கு வந்ததை பேசுவதை பிரேமலதா நிறுத்த வேண்டும்..! தவ்ஹீத் ஜமா அத் கண்டனம்.!


நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தே.மு.தி.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதாவின் பேச்சு, இஸ்லாமிய மக்களிடம் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் கிளப்பி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தே.மு.தி.க. அணிக்காக அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார் பிரேமலதா. கடந்த 15-ம் தேதி இரவு, இஸ்லாமியர்கள் பெருமளவில் வசிக்கும் கடையநல்லூர் தொகுதியில் தே.மு.தி.க சார்பாக போட்டியிடும் கோதை மாரியப்பன் என்பவரை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். கடையநல்லூர் மணிக்கூண்டு பெரிய பள்ளிவாசல் அருகில் அவர் பேசிய பேச்சுக்கள் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் பிரேமலதா பேசும்போது, ''இந்தப் பகுதியில் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறந்து சாதனை படைத்து இருக்கிறது இந்த அரசு. ஜெயலலிதாவின் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கு. அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து சீக்கிரமே சிறைக்குச் செல்வார். அதற்கான நாட்கள் சீக்கிரமே வரும்.


தற்போது தர்மத்துக்கு அதர்மத்துக்கும் இடையே போர் நடக்கிறது. தர்மத்தின் பக்கமாக கேப்டன் இருக்கார். அதர்மத்தின் பக்கமாக மற்றவர்கள் இருக்காங்க. 

தமிழகத்தில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சி செய்தும் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. தவறான பாதையில் சென்றவர்களின் முடிவு எப்படி ஆனது என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

சதாம் உசேன் நிலைமை என்னவானது? பதுங்கு குழிக்குள் பல்லுடைந்து பதுங்கி இருந்த கோரமுகத்தை கொண்ட சதாம் உசேனை, ஆணவத்தின் உச்சியில் இருந்த அவனை பிடித்து இழுத்து வந்து அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி கேவலமான மரணத்தை கொடுத்ததை இந்த உலகம் மறந்திருக்காது. அதை ஆணவத்தில் இருக்கும் தலைவர்கள் அறியவில்லையா? உங்களுக்கும் இதே நிலைமை தான் ஏற்படும்" என்று பேசினார்.

சதாம் உசேன் பற்றி அவர் பேசிய பேச்சு தற்போது சர்சையாகி உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் பிரேமலதா இப்படி வரலாற்றை தவறாக சித்தரித்தை, இஸ்லாமிய அமைப்புகள் கண்டித்து வருகின்றன.


 இது பற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமா அத் கடையநல்லூர் பஜார் கிளைத் தலைவரான குறிச்சி சுலைமான், ''வரலாறு என்ன என்பது கூட தெரியாமல் வாய்க்குவந்ததை எல்லாம் பிரேமலதா பேசிக் கொண்டிருக்கிறார்.

வரலாறாக வாழ்ந்து மறைந்தவர் சதாம். உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த அமெரிக்காவை துணிச்சலுடன் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் அந்த நாட்டுக்கு பெரும் சவாலாக விளங்கியவர். கடைசி வரையிலும் அமெரிக்காவின் சர்வாதிகாரத்துக்கு அடிபணியாமல் துணிச்சலுடன் போர்க்களத்தை எதிர்கொண்டவர்.

கடைசியில் அமெரிக்காவின் போலியான நீதிமன்ற விசாரணையையும் வழக்கறிஞர் யாரையும் வைத்துக் கொள்ளாமல் தானே வாதாடி எதிர்கொண்டார். அந்நாட்டு நீதிமன்றம் கொடுத்த மரண தண்டனையையும் புன்முறுவலுடன் எதிர்கொண்டு துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார். 


ஆனால், இந்த வரலாறு எதுவுமே தெரியாமல், பல் உடைக்கப்பட்டு கேவலமாக கொல்லப்பட்டதாக பிரேமலதா பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. 

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது வாய்க்கு வந்ததை எல்லாம் பொறுப்பற்ற முறையில் பொது இடத்தில் பேசுவதை பிரேமலதா போன்ற அரசியல் தலைவர்கள் இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார் காட்டமாக.

அரசியல்வாதிகள் என்றாலே சர்ச்சை தானோ?
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.