இந்தியா சற்று நிதானமாக முன்னேறி வந்தாலும், இந்தியர்களின் பெயரும் திறமைகளும் ஜெட் வேகத்தில் முன்னேறி வருகிறது.
பல இந்திய பிரபலங்களின் வரிசையில் தற்சமயம் மும்பையைச் சேர்ந்த 8 வயது மாணவன் யாஷஸ் தஸ்ஸானி சேர்ந்துள்ளான். முதன்முறையாக உலகம் முழுக்க லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸால் நடத்தப்பட்ட “Your Announcement Contest”ல், 9 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 குழந்தைகளில் யாஷஸ் முதலிடம் பெற்றுள்ளான்.
இதற்கு இவனுக்குக் கிடைத்தது அரிதிலும் அரிதான வாய்ப்பு. ஆம், விமானத்தினுள் நேரடி அறிவிப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கேபின் குழுவினருடன் இணைந்து, ஃப்ராங்ஃபர்ட் செல்லும் விமானத்தில் அனைத்து பயணிகள் முன்னிலையிலும் அறிவிப்பு செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளான் நம் யாஷஸ்.
இதோடு மட்டுமல்லாமல், ஐரோப்பாவில் தனக்கு விருப்பமுள்ள இடத்திற்கு இரண்டு பேரோடு செல்ல இலவசமாக விமான பயணச்சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இதைக் குறித்து தெற்கு ஆசியாவின் இயக்குனர் வொல்ஃப்காங்க் வில் கூறுகையில், ” குழந்தைகளுக்கு பறப்பது என்றாலே குஷிதான். அதுவும், விமானத்தின் உள்ளேயே நேரடி அறிவிப்பு செய்வது என்றால் கேட்கவே வேண்டாம். யாஷஸ் தன் கனவை நிறைவேற்றிக் கொண்டதற்கும், அவனுடைய திறமைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
எங்கள் வாடிக்கையாளர்களில் குழந்தைகள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த போட்டியில் இந்தியர்கள் அதிகளவில் கலந்து கொண்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் எங்கள் உறவைப் பலப்படுத்துவதாகவும் உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
லுஃப்தான்ஸாவைச் சேர்ந்த சிறந்த ஜூரி நபர்கள் இணைந்து, 15 பேர் கொண்ட பட்டியலை உருவாக்கி, அதிலிருந்து ஆன்லைன் ஓட்டுப்பதிவின்மூலம் வெற்றியாளரை தேர்ந்து எடுத்து உள்ளனர். யாஷஸ் லுஃப்தான்ஸா விமான எண் 007ல் மனம் நிறைந்த வணக்கம் கூறுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
இவ்வளவு தனித்திறமை உள்ள யாஷஸ், மும்பையிலுள்ள ஜி.டி.மெமோரியல் பள்ளியில் படித்து வருகிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக