துபாய் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் ஜும்ஆ அல் மஜித் கலாச்சாரம் மற்றும் பாரம்பர்ய மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் அமீரகத்தின் பாரம்பர்ய வரலாறு, அரபி மொழியில் பழங்காலத்தில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள், சர்வதேச நூலகம் உள்ளிட்டவை உள்ளது.
இந்த மையத்தில் அமீரகத்துக்கு வந்துள்ள இந்திய தலைவர்கள் உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் வந்துள்ள தகவலும் இடம் பெற்றுள்ளது.
பழங்காலத்தில் கையால் எழுதப்பட்ட பிரதிநிதிகள் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இதற்காக இந்த மைய அதிகாரிகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அழிந்து வரும் நிலையில் உள்ள பழங்கால அரபி மொழி நூல்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மையத்தை ஜும்ஆ அல் மஜித் என்ற தொழிலதிபர் தனிப்பட்ட முறையில் நிர்வகித்து வருகிறார்.
இத்தகைய சிறப்பு மிக்க மையத்தை இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். இந்த குழுவில் இந்திய வெளியுறவுத்துறையின் முன்னாள் தூதர் வீணா சிக்ரி, துபாய் இந்திய துணைத் தூதரக அதிகாரி அனுராக் பூசன், அபுதாபி இந்திய தூதரகத்தின் அதிகாரி நீதா பூசன், தீபா ஜெயின் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
ஜும்ஆ அல் மஜித் கலாச்சாரம் மற்றும் பாரம்பர்ய மையத்துக்கு வந்த இந்திய அதிகாரிகள் குழுவினரை ஜும்ஆ அல் மஜித் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே கலாச்சார ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றி விரிவாக பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பழங்கால நூல்கள் டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்படும் பணிகளை பார்வையிட்டனர். மேலும் தங்க முலாம் பூசப்பட்ட திருக்குர்ஆன் உள்ளிட்டவற்றையும் பார்த்தனர்.
அப்போது இந்திய குழுவினருக்கு ஜும்ஆ அல் மஜித் நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார். இதன் பின்னர் இந்திய அதிகாரிகள் குழுவினர் ஜும்ஆ அல் மஜித் அவர்களின் முயற்சியினை பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக