Breaking News
recent

இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள்…


வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முஸ்லிம்களின் மத்தியில் செயல்படும் முக்கிய அரசியல் இயக்கங்களான முஸ்லிம் லீக், த.மு.முக (ம.ம.க), SDPI ஆகிய மூன்றும் திமுக கூட்டணியில் உள்ளன. தேர்தலில் பங்கேற்காத இன்னொரு முக்கிய அமைப்பான தவ்ஹீத் ஜமாத் தன் ஆதரவாளர்களை தங்களின் விருப்பம்போல வாக்களிக்கலாம் எனச் சொல்லியுள்ளது.
ஆக இம்முறை தமிழக முஸ்லிம்களின் வாக்குகள் பெரும்பான்மையும் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்குச் செல்கிறது. இதை நான் மனதார வரவேற்கிறேன்.
முஸ்லிம்கள் போன்ற இன்றைய மதவாத பாசிசத்தால் இலக்காக்கப்படுகிற மக்கட் பிரிவினரிடம் இத்தகைய ஒற்றுமை அவசியம். எப்படியாவது ஆளுக்கொரு பிரிவை வளைத்துப் போட்டு முஸ்லிம் வாக்குகளைப் பிரித்துவிடலாம் என்கிற எண்ணம் பெரிய கட்சிகளுக்கு வந்துவிடக் கூடாது. 
ஆனால் அப்படித்தான் இதுவரை நடந்து வந்துள்ளது. ஆனால் இம்முறை அப்படி நாங்கள் பிருந்துபோய்விட மாட்டோம் என்பதை முஸ்லிம் அம்மைப்புகள் வெளிப்படுத்திவிட்டன. ஆணவத்தின் உருவமான ஜெயலலிதா உண்மையில் அதிர்ச்சி அடைந்திருக்கக் கூடும். அவருக்கு ஒரு நல்ல பாடம் இதன் மூலம் கற்பிக்கப்பட்டுவிட்டது.
மதமாற்றத் தடைச் சட்டம் இயற்ற முயன்றது, மோடியுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான உறவைப் பேணுவது. தங்களின் இயற்கைக் கூட்டாளி என ஒரு முறை அத்வானியால் பாராட்டப்பட்டது என முஸ்லிம்கள் அதிமுகவிடம் இருந்து விலகி நிற்கப் பல நியாயங்கள் உண்டு.
அதே போல ஒப்பீட்டளவில் அதிமுகவைக் காட்டிலும் திமுகவுடன் நெருங்கி நிற்பதற்கும் பாரம்பரியமாகப் பல நியாயங்கள் உண்டு. உ்ண்மையில் கருணாநிதியின் நம்பிக்கைத் துரோகம்தான் முஸ்லிம்கள் முழுமையாகத் தம் ஆதரவை முந்திய தேர்தல்களில் திமுகவுக்கு அளிக்க இயலாமற் போனதற்கான அடிப்படையாக இருந்தது.
கோவைக் கலவரங்களின் போது அதிகாரத்தில் இருந்த அவர் நடந்து கொண்ட முறை, சிறைக் கைதிகள் விடுதலை விஷயத்தில் நடந்து கொண்டது முதலியன சில எடுத்துக்காட்டுகள். பாபர் மசூதி இடிப்பிலும் கூட மிகவும் வன்மையான எதிர்ப்பை திமுக செய்யவில்லை. “ஏன் சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு கண்டனக் கூட்டம் போட்டோமே..” என ஒருமுறை கருணாநிதி அதை ஒரு சாதனையாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது.
ஆனால் இதை எல்லாம் மறந்து இன்று முஸ்லிம்கள் முழுமையாக திமுகவுடன் நிற்கத் துணிந்தது இன்றைய கால நிலையில் சரியான முடிவுதான்,அகில இந்திய அளவில் மதச்சார்பின்மையை முன்நிறு்த்தி இயங்கும் காங்கிரசும் இக்கூட்டணியில் இருக்கும் நிலையில் முஸ்லிகள் இங்கு நிற்பதே சரியானது.
திமுக இதை உணர்ந்து எதிர்காலத்தில் முஸ்லிம்கள் விஷயத்தில் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ளூம் என எதிர்பார்ப்போம்.
இந்துத்துவ எதிர்ப்பில் மற்றவர்களைக் காட்டிலும் கம்யூனிஸ்டுகள் உண்மையாக இருந்த போதிலும் ஏன் இன்று முஸ்லிம்கள் அவர்களோடு இல்லை? இதற்கும் பாரம்பரியமாகப் பல காரணங்கள் உண்டு.
கம்யூனிஸ்டுகள் வலுவாக உள்ள கேரளம், மே.வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். ஆனால் முப்புது ஆண்டுகளுக்கும் மேல் இடதுசாரிகள் ஆண்டும் மே.வங்கத்தில் உள்ள முஸ்லிம்களின் நிலை படு மோசமாக உள்ளதை சச்சார் அறிகை சுட்டிக் காட்டியுள்ளது.
இன்று முஸ்லிம்கள் அங்கு மம்தாவுடன் நிற்கின்றனர். கேரளத்திலும் SDPI யும் இடதுசாரிகளும் எதிர் எதிராக உள்ளனர். பாபர் மசூதி இடிப்பு போன்ற நிகழ்விலும் கூட கம்யூனிஸ்டுகள் இன்னும் வலிமையாகவும் உண்மையாகவும் முஸ்லிம்களோடு நின்றிருக்க வேண்டும். போராட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும்.
பாபர் மசூதி இருக்கும் ஃபைசாபாத் நாடாளுமன்றத் தொகுதி பாரம்பரியமாக சிபிஐ வெற்றி பெற்ற தொகுதி என்பது நினைவிற்குரியது. இன்று அங்கும் அது தோல்வியைத் தழுவியுள்ளது.
எப்படி இன்று கம்யூனிஸ்டுகள் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்குச் சங்கம் அமைத்தால் மட்டும் போதாது, தீன்டாமை ஒழிப்பிற்கும் சங்கம் வைத்து தலித் மக்களுக்காகவும் நிற்க வேண்டும் என முடிவெடுத்துச் செயல்படுகிறார்களோ அதே போல சிறுபான்மை மக்களுக்காகவும் இயக்கங்கள், வெகு ஜன அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கி போராடி அவர்களின் நம்பிக்கையைக் கம்யூனிஸ்டுகள் பெற்றாக வேண்டும்.
விவசாயிகள் + தொழிலாளிகள்+ தலித்கள்+ சிறுபான்மையினர் என்பதாக இந்த இணைவு எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும். சரி, தொடங்கிய இடத்திற்கு வருகிறேன்.
தமிழக முஸ்லிம்கள் தங்களுக்குள் பிளவுகள் ஏதும் இன்றி முழுமையாக இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரே கூட்டணியில் இணைந்து நி்ற்பதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்.
அ. மார்க்ஸ்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.