வருட வருமானம் ரூ. 10-லட்சம் உள்ளோருக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி விட்டதாம். ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது.
பின்னர் தள்ளிப் போடப்பட்டு தற்போது ஏப்ரல் 1 முதல் இது அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவை ஏற்கனவே மத்திய அரசு பிறப்பித்து விட்டது.
ஏழைகளுகளுக்குத்தான மானியம் வழங்க அரசு உறுதியுடன் இருப்பதாக ஏற்கனவே மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
அரசின் முடிவுப்படி வருட வருமானம் ரூ. 10-லட்சம் இருப்போருக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்படும்.
அவர்கள் சந்தை விலையில் மட்டுமே சிலிண்டரை வாங்க முடியுமாம். தற்போது வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு எந்தவிதமான வருமான உச்சவரம்பும் கிடையாது.
இந்த எண்ணிக்கையைக் குறைக்கவும் மத்திய அரசு பலமுறை முயன்றது. ஆனால் கடும் எதிர்ப்பு நிலவுவதால் இப்போது பல்வேறு வகையான குறுக்கு வழிகளை மத்திய அரசு கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
முதலில் உங்களது மானியத்தை விட்டுக் கொடுக்கலாம் என்று மக்களிடம் தீவிரமாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தது. இதில் பலர் விட்டுக் கொடுத்தனர். பலர் தெரியாத்தனமாக முன்பதிவு செய்யும்போது அதற்குரிய நம்பரை அழுத்தாமல், விட்டுக் கொடுப்பதற்கான நம்பரை அழுத்தி பறி கொடுத்த கதையும் உண்டு.
இந்த நிலையில் தற்போது வருமான உச்சவரம்பை அமலுக்குக் கொண்டு வருகிறது மத்திய அரசு. ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரவுள்ளதாம். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க ஆரம்பித்துள்ளது. வருமான வரித்துறை மூலமாக, ஆண்டு வருமானம் ரூ. 10லட்சம் உள்ளோர் யார் யார் என்ற பட்டியல் பெறப்பட்டு வருகிறது.
இதுவரை 5 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனராம். இவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ரத்தாகும் விவரம் தெரிவிக்கப்பட்டு வருகிறதாம்.
ரூ. 10 லட்சம் வருமானம் உடையோர் தங்களது சமையல் எரிவாயு முகவரை அணுகி அவர்கள் தரும் விண்ணப்பத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டுமாம். அதன் பின்னர் அவர்களது மானியம் ரத்து செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக