Breaking News
recent

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் 108 சேவை திட்டம் தொடங்கியது.!


தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அவசரகால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்களின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் விலை மதிப்பற்ற மனித உயிர் இறப்புகள் ஏற்படுகின்றன. இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மன உளைச்சலுக்குஆளாவதோடு வருமானம் ஈட்டும் நபரை இழந்து பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகின்றனர். 

உயிர் இழப்பை தடுக்கவும், விலை மதிப்பற்ற மனித உயிர்களைக்
காப்பாற்றவும், அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் தலைக்காய சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி வருவதோடு, ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் திட்டத்தில் செயல்பட்டு வரும் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை கடந்த 5 ஆண்டுகளில் 385-லிருந்து 755-ஆக உயர்த்தியுள்ளது.

இதுமட்டுமின்றி, 66 பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு அவசரகால ஊர்திகள், 78 மலையோரங்கள் மற்றும் மணல் பாங்கான பகுதிகளில் இயங்கக்கூடிய சிறிய ரக அவசரகால ஊர்திகள், சென்னை புறநகர் பகுதியில் 2 அவசரகால சிகிச்சை மையங்கள் ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன.

‘108’ அவசரகால சேவையை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், அவசரகால முதலுதவிக்காக 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 41 இருசக்கரவாகனங்களின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அவசரகால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்களில், 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 இருசக்கர வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும்அமைக்கப்பட்டுள்ளன. 

ஆடவர் மட்டுமின்றி, பெண் அவசரகால மருத்துவ உதவியாளரும் இயக்கும் வண்ணம் இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இயக்கப்படும் அவசரகால முதலுதவிக்கான ஸ்கூட்டர் வடிவிலான இருசக்கரவாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு, முதல் 10 நிமிடங்கள் பிளாட்டினம் நிமிடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த முதல் 10 நிமிடங்களில்
பாதிப்பின் தன்மையை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதியை அசையாமல் செய்து உயிர் மீட்பு , உயிர் வாயு வழங்குவது, இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது போன்ற முதலுதவிகள் பாதிப்பின் தன்மையை குறைத்து, உயிர் காக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

விபத்து பகுதிகளுக்கு ‘108’ அவசரகால ஊர்திகள் செல்வதற்கு முன்பு, பாதிப்புக்குள்ளானவருக்கு உடனடியாக தரமான முதலுதவி கிடைக்க இந்த இருசக்கரமுதலுதவி வாகனங்கள் வழிவகை செய்யும். இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதற்கான கால அளவு மேலும் குறையும்.

இந்த இருசக்கர முதலுதவி வாகனத்தில், கையில் எடுத்து செல்லக்கூடிய உயிர் வாயு சிலிண்டர், நாடித்துடிப்பை கண்டறியும் கருவி, இரத்த அழுத்தத்தை அறியும் கருவி, இரத்தத்தில் சர்க்கரை அளவை அறியும் கருவி, உடல் சூட்டை அறியும் கருவி போன்ற உயிர் காக்கும் கருவிகளும் தேவையான மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன. 

இந்த இருசக்கர வாகனத்தை பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ உதவியாளர் ஓட்டுவார். அவசர ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி தன்மையுடன் கூடிய வண்ணத்தில் இவ்வாகனங்கள் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவசரகால அழைப்பு, ‘108’ அவசர கட்டுப்பாடு அறைக்கு வந்தவுடன், பாதிப்பின் தன்மைக்கேற்ப இந்த இருசக்கர வாகனம் அனுப்பி வைக்கப்பட்டு, பாதிப்பின் தன்மையை ஆய்வு செய்து முதலுதவி வழங்கப்படும். 

பாதிப்பின் தன்மை அதிகமாகவும், மருத்துவமனையில் உடனடி சிகிச்சை பெற வேண்டிய அவசியமும் இருப்பின், ‘108’அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்.

இந்த அவசரகால இருசக்கர வாகனம், முதல் கட்டமாக சென்னை மாநகரத்தில் முக்கிய சந்திப்புகள், குறுகிய மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில்நிறுத்திவைக்கப்பட்டு, பகல் பொழுதில் போக்குவரத்து அதிகம் இருக்கக்கூடிய இடங்களில் இயக்கப்படும். இவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து, இந்தத் திட்டம் மற்ற
நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இந்த சிறப்பு சேவை மூலம், மேலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.