Breaking News
recent

ஈசி இனி ஈஸியாக பார்க்கலாம் இணையதள வசதி இருந்தால் போதும்!



வீடு, நிலம், மனை உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு முன்பாக முதலில் ஈசி போட்டு பார்ப்பது மிகவும் அவசியமாகும். வீடு, விவசாய நிலம் அல்லது வீட்டுமனை ஆகியவற்றில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முதலில் சம்பந்தப்பட்ட இடம் அமைந்துள்ள பகுதிக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் ரீ சர்வே எண்னை குறிப்பிட்டு 25 அல்லது 10 ஆண்டுகளுக்கு வில்லங்கம் போட்டு பார்ப்பது வழக்கத்தில் உள்ளது. 
இதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆண்டுகளுக்கு ஏற்ப தேடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தி சொத்தின் மீதான வில்லங்க சான்று பெற குறைந்தது நான்கு நாட்களாகும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டதை தொடர்ந்து வில்லங்கசான்றினை வீட்டில் இருந்த படியே ஒரே நாளில் பெற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. 
இதற்கு இணையதளத்துடன் கூடிய கணினி இருந்தால் போதும். 
தமிழக அரசின் பதிவு துறை இணையதளமான
www.tnreginet.com என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். 
இணையதளத்தின் இடதுபுறத்தில் வியூ ஈசி என்ற இடத்தில் கிளிக் செய்து அதில் நாம் வில்லங்கம் பார்க்க போகின்ற சொத்தின் ரீசர்வே எண், சொத்து அமைந்துள்ள மண்டலம், சொத்து அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகம், வில்லங்கம் எந்த தேதியில் இருந்து பார்க்க வேண்டும் என்பது போன்ற விபரங்களை நிரப்ப வேண்டும். 
பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டினை டைப் செய்து கிளிக் செய்தால் நமக்கு ஒரு பாஸ்வேர்டு எனப்படும் ரகசிய குறியீடு திரையில் தோன்றும். அந்த ரகசிய குறியீட்டை நாம் குறித்து வைத்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த ரகசிய குறியீட்டை டைப் செய்து கிளிக் செய்தால் நம்முடைய சொத்தின் வில்லங்க சான்று கிடைத்துவிடும்.
வில்லங்கசான்று தவிர நமது சொத்தின் பத்திரத்தையும் நாம் இணையதளம் மூலம் பார்க்க முடியும். நம்மிட பத்திரத்தின் அனைத்து பக்கங்களும் கணினியில் தோன்றும். 
இதற்கும் இதே முகவரியில் சென்று பார்க்க முடியும். ஒரு நபர் எத்தனை சொத்துக்கள் வைத்திருந்தாலும் அனைத்து சொத்துக்களுக்கும் அவ்வப்போது ஈஸி போட்டு பார்த்துக்கொள்ள முடியும். ஏற்கனவே பத்திரபதிவு நடவடிக்கைகள் அனைத்தும் கேமராக்கள் மூலமாக பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது வில்லங்கசான்றுகளையும் வீட்டிலிருந்து கொண்டே பார்த்துக்கொள்ள முடியும் என்பதால் மோசடிகள், போலி கிரயம் போன்றவை நடப்பது வெகுவாக குறைய வாய்பபு உள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.